"நாங்க இருக்கோம்!" தைவானுக்கு சப்போர்ட்டாக வரும் அமெரிக்கா.. ஆனால் கண் முன் வந்துபோகும் உக்ரைன் போர்
டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் பைடன், சீனாவை எச்சரிக்கும் வகையில் சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
அதன்படி அமெரிக்க அதிபர் பைடனும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ளார். மாநாட்டில் கலந்துகொள்ளும் முன்பு, ஜப்பான் பிரதமரைச் சந்தித்து பைடன் ஆலோசனை நடத்தினர்.
குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு... பிரதமர் மோடி நாளை ஜப்பான் பயணம்
அதிபர் பைடன்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், சீனா பேராபத்திடம் விளையாடிக் கொண்டு இருக்கிறது என்று எச்சரித்துள்ளார். தைவான் மீது சீனா படையெடுத்தால் தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளைச் செய்யும் என்றும் உறுதி அளித்தார். சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், அதிபர் பைடன் சீனாவுக்கு எதிராக முதல்முறையாக இவ்வளவு கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டிற்கு எதிராக ரஷ்யா போரைத் தொடங்கிய போதே, அமெரிக்கா ராணுவ ரீதியில் தலையிடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், அமெரிக்கா இந்த போரில் நேரடியாகத் தலையிடவில்லை. ரஷ்யா மீது இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல ரஷ்யப் படைகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளப் பாதுகாப்பு ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தைவானுக்கு உதவுவோம்
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே சில காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. தைவான் வான்வழியில் அனுமதியின்றி சீன விமானப்படை விமானங்கள் பயிற்சியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவைப் போலச் சீனா தைவான் மீது படையெடுத்தால், தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஆம்! நிச்சயமாக" என்று பதில் அளித்தார்.
மற்றொரு உக்ரைன் விவகாரம்
மேலும் அவர், "இது தான் நாங்கள் அளித்துள்ள வாக்குறுதி. 'ஒரே சீனா' என்ற கொள்கையில் நாங்கள் உடன்பட்டுக் கையெழுத்திட்டோம். ஆனால் இதற்காக அதை வலுக்கட்டாயமாகத் திணிக்கலாம் என்று அர்த்தமல்ல. அது ஒட்டு மொத்த பிராந்தியத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி, மற்றொரு உக்ரைன் நடவடிக்கையைப் போல மாறும்" என்றார்
ஆபத்துடன் விளையாடுகிறது
மேலும், சர்ச்சைக்குரிய பகுதியில் அதிகரிக்கும் சீனாவின் கடற்படை கப்பல் நடமாட்டம், போர் விமான பயிற்சிகளைக் குறிப்பிடும் வகையில், "ஏற்கனவே சீனா மிகவும் ஆபத்தான ஒன்றுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறது. உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். இது தைவானை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற முயலும் சீனாவுக்கு எச்சரிக்கையாகவே இருக்கும்" என்று பேசினார்.
தெளிவு இல்லை
பெரும்பாலான உலக நாடுகளைப் போலவே, அமெரிக்காவும் ராஜதந்திர ரீதியாகச் சீனாவை அங்கீகரிக்கிறது. ஆனால் அதேநேரம் தைவான் நாட்டு உடனும் ராஜதந்திர உறவுகளையும் பராமரிக்கிறது. சீனா - தைவான் விவகாரத்தில் பல ஆண்டுகளாகத் தெளிவான கொள்கை முடிவை அமெரிக்கா எடுக்கவில்லை. மேலும், கொள்கை ரீதியாகத் தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா என்ன செய்யும் என்பதையும் அது தெளிவுபடுத்தவில்லை.
அமெரிக்கா கொள்கை
சுருங்கச் சொன்னால் தைவான் மீது சீனா போரை ஆரம்பிப்பதைத் தடுக்கும் வகையிலும், அதேநேரம் தைவானின் சுதந்திரத்தை அங்கீகரிக்காமல் இருக்கும் வகையில் அமெரிக்காவின் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் பைடன், போர் ஏற்பட்டால் அமெரிக்கா ராணுவ ரீதியாக உதவும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனா-தைவான்
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் தைவானை ஆட்சி செய்ததில்லை. ஆனால் தைவான் தீவைச் சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறது. தேவைப்பட்டால் ஒரு நாள் வலுக்கட்டாயமாகத் தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ளவும் சீனா தயாராகவே உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் தான் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்ரோஷமான விரிவாக்கத்திற்குத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகள் உள்ளது.