இந்தியப் படைகளை விரட்டியடிக்க தயங்க மாட்டோம்.. சீனா மிரட்டல்
எல்லையில் இந்தியப் படைகளை விரட்டியடிக்க தயங்க மாட்டோம் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
பெய்ஜிங்: எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் இந்தியப் படைகளை விரட்டியடிக்க தயங்க மாட்டோம் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
டோக்லாம் எல்லையில் அத்துமீறும் சீனா அங்கு தனது ராணுவ வீரர்களையும் குவித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் இந்தியாவும் தனது படையை குவித்துள்ளது.
எல்லையில் இருந்து தனது படைகளை பின்வாங்க மறுக்கும் சீனா இந்தியாவை மட்டும் தனது படைகளை திரும்பப்பெறக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியப் படைகளை விரட்டியடிக்க கொஞ்சமும் தயங்கமாட்டோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை
இதுதொடர்பாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளிட்டுள்ளது. அதில் இந்தியாவை சிக்கலில் ஆழ்த்தும் பொருளாதார பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சீனா எச்சரித்துள்ளது.
உண்மையான பலத்தை காட்டவேண்டும்
போர் நிகழ்ந்தால் முடிவு என்னவாக இருக்கும் என்பதை மோடி உணர வேண்டும் என்றும் சீன ஊடகம் தெரிவித்துள்ளது. தனது உண்மையான பலத்தை நாட்டு மக்களுக்கு ஆளும் அரசு கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
விரட்டியடிக்கும் திறன்
சீனா டோக்லாமில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளது. ஆனால் எல்லைப் பிரச்சனை போராக மாறினால் இந்திய படைகளை விரட்டியடிக்கும் திறன் சீன மக்கள் ராணுவத்திற்கு உள்ளது என்றும் எச்சரித்திருக்கிறது.
இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும்
எல்லையில் அமைதியையே சீனா .விரும்புவதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு பேச்சுவார்த்தையா, போரா என்பதை இந்தியா தான் தீர்மானிக்க வேண்டும் என்று சீன ஊடகம் தெரிவித்துள்ளது.