"அதுக்கு வாய்ப்பே இல்லை.. நாங்க எப்போதும் ரஷ்யா பக்கம்.." உலக நாடுகளுக்கு உறுதியாகச் சொன்ன சீனா
பெய்ஜிங்: உக்ரைன் மீதான போருக்குப் பின்னர், பல்வேறு உலக நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வரும் நிலையில் சீனா இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்யா அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து ஆரம்பித்த இந்தப் போர் கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நகரங்கள் அருகே வான்வழித் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறவும் முயன்று வருகின்றனர்.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா கடந்த சில மாதங்களாகவே ராணுவத்தைக் குவித்து வந்தது. மேலும், போர் பயிற்சிகளையும் உக்ரைன் எல்லைக்கு மிக அருகே தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது. இருப்பினும், ரஷ்யா முழு வீச்சில் போரைத் தொடங்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. போர் ஆரம்பித்த பின்னர் பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல நாடுகளும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன,

சீனா
வரும் நாட்களில் மேலும் பல பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் புதினின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன, இருப்பினும், சிரியா, ஈரான், பெலாரஸ் உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள சீனா, இதைப் போர் என அழைக்கக் கூடாது என்றும் ராணுவ நடவடிக்கை என்றே குறிப்பிட வேண்டும் என்றும் கூட தெரிவித்திருந்தது.

பொருளாதாரத் தடைகள்
இதனிடையே உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் நிலையில், சீனா இதுபோல எந்தவொரு தடையையும் விதிக்காது என்று அந்நாடு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் வாங்கும் நாடாக உள்ள சீனா, ஏற்கனவே உலக நாடுகள் ரஷ்யா மீது விதிக்கும் பொருளாதாரத் தடைகளைக் கடுமையாக எதிர்த்துள்ளது.

எதிர்ப்பு
இது தொடர்பாக சீன வங்கி மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் குவோ ஷுகிங் கூறுகையில், "நாங்கள் அத்தகைய தடைகளை விதிக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகள் உடனும் வழக்கமான ஒரு சாதாரண பொருளாதார, வர்த்தக மற்றும் நிதி பரிமாற்றங்களை வைத்திருப்போம். ஒருதலைபட்சமாக அறிவிக்கப்படும் உலக நாடுகளின் தடைகளை நாங்கள் ஏற்கவில்லை, இது போன்ற பொருளாதாரத் தடைகள் நிலைமை மேம்படுத்த உதவாது. எந்தவொரு நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தாது" என்றார்.

சீனா
முன்னதாக ரஷ்யா போரைத் தொடங்கிய சமயத்திலும் சட்டவிரோதமாகப் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது என எதிர்த்த சீனா, உக்ரைனில் பதற்றம் அதிகரிக்க அமெரிக்காவே காரணம் எனக் குற்றம் சாட்டியது, அதே நேரத்தில் அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications