தொழிலாளி பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்.. அந்த மனசு தான் சார் கடவுள்
சீனாவில் உணவு சப்ளை செய்யும் தொழிலாளியின் பிறந்தநாளுக்கு வாடிக்கையாளர் ஒருவர் கேக் ஆர்டர் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
பிஜீங்: சீனாவில் உணவு சப்ளை செய்யும் தொழிலாளியின் பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் செய்து மகிழ்ந்திருக்கிறார் வாடிக்கையாளர் ஒருவர்.
உலகமே இன்று திண்டாடிக்கொண்டிருப்பதற்கு காரணம் சீனாவின் ஊகான் நகரம் தான். அங்கிருந்து ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, மக்களை கதிகலங்க செய்துள்ளது.

ஆனால் ஊகான் நகரம் இன்று கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுவிட்டது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஊகான் நகரம் மீள்வதற்கு அங்குள்ள மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், உணவு விநியோக தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தான் காரணம். அல்லும் பகலும் உழைத்து, அந்நகரை கொரோனாவிடம் இருந்து மீட்டிருக்கின்றனர்.
அவர்களை கவுரவிக்க நினைத்த ஊகான் நகரைச் சேர்ந்த ஒருவர், ஒரு பேக்கரியில் கேக் ஆர்டர் செய்துள்ளார். அந்த கேக்கை உணவு விநியோகிக்கும் தொழிலாளர் ஒருவருக்காக அவர் ஆர்டர் செய்துள்ளார்.
கேக்கை டெலிவரி எடுக்க சென்ற அந்த தொழிலாளர், தனது பிறந்தநாளுக்காக கேக் ஆர்டர் செய்யப்பட்டதை அறிந்து நெகிழ்ந்து போனார். அயராது உழைத்து கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு, தனது பிறந்தநாளே மறந்துபோய்விட்டது. வாடிக்கையாளர் கேக் ஆர்டர் செய்ததன் மூலம் தான் தனக்கு பிறந்தநாள் என்பதே நினைவுக்கு வந்திருக்கிறது.
தன் மீது வாடிக்கையாளர் வைத்திருக்கும் அன்பை நினைத்து கண் கலங்கிவிட்டார் அந்த தொழிலாளர். ஏதோ ஒரு ரோட்டோரத்தில் அமர்ந்து கண்ணில் நீருடன் அந்த கேக்கை தொழிலாளர் சாப்பிடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கொரோனா எனும் கொடிய அரக்கனால் நாம் அனைவருமே இன்று கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஒருவெருக்கு ஒருவர் தொட்டு பேசி ஆறுதல் கூறக்கூட முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் இது போன்ற செயல்கள் தான் மனிதம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு சான்று.












Click it and Unblock the Notifications