கொரோனாவுக்கு எதிரான போர்.. வைரசே முன்னணியில் உள்ளது... உலக சுகாதார அமைப்பு கருத்து
கோபன்ஹேகன்: கொரோனாவுக்கு எதிரான போரில் தற்போதுவரை வைரசே முன்னணியில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா பிரிவு இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்
உலகில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது, தற்போதைய சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகக் கருதப்படுகிறது. பல நாடுகளும் தடுப்பூசி வழங்கும் பணிகளைத் தொடங்கிவிட்டன
இருப்பினும், கொரோனா தடுப்பூசிகளுக்கும் தற்போது தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில் போன்ற பல்வேறு நாடுகளும் கூட தடுப்பூசி பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. மறுபறும் உருமாறிய கொரோனா குறித்த செய்திகளும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உருமாறிய கொரோனா
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா பிரிவு இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் கூறுகையில், "உருமாறிய வைரஸ் பரவல் தற்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், இதை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். உருமாறிய கொரோனா குறித்த ஆய்வுகளை நாம் அதிகரிக்க வேண்டும்.
தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு
பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகளை நாம் வேகப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள நிறுவனங்கள் மற்ற மருந்து நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்" என்றார். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தடுப்பூசிகளை அதிகளவு வாங்குவதால், மற்ற நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பலன் அளிக்குமா
மறுபுறம், உருமாறிய கொரோனா தொற்றுகளுக்கு எதிராகத் தடுப்பூசிகள் பலன் அளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து ஹான்ஸ் க்ளூக் பேசுகையில், "இதுதான் இப்போது நம்முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி. இந்தப் போரில் இன்னும்கூட கொரோனா வைரசே முன்னணியில் உள்ளது என்பதை நினைவு படுத்தும் விதமாக இது உள்ளது, முன்பைவிட தற்போது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சவாலாக உள்ளது" என்றார்.
நிலை மாறுமா?
டிசம்பர் மாதம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்த நிலை மாறும் என்று கருதியதாகவும் இருப்பினும் தற்போதுவரை மோசமான நிலையே நீடிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் தனது மக்கள் தொகையில் 20% பேருக்குத் தடுப்பூசியை வழங்கியவுடன், மற்ற ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.