கொரோனாவால் 'கொரோனா'வுக்கே இப்டி ஒரு பாதிப்பா.. பாவம் பாஸ் குடிமகன்கள்!
கொரோனா பாதிப்பு காரணமாக கொரோனா பீர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மெக்சிகோ: கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில், மெக்சிகோவில் இயங்கி வரும் உலக புகழ்பெற்ற கொரோனா மதுபான நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
உலகளவில் கொரோனோ வைரஸ் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் மேலும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே தொழிற்கூடங்களும் மூடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவும் தீவிரமாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அந்த நாட்டில் கொரோனா தாக்கி 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற அனைத்து வகையான தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் புகழ்பெற்ற கொரோனா பீரை உற்பத்தி செய்து வரும், குரூபோ மாடேலோ மதுபான நிறுவனம் தனது உற்பத்தியை ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிவிட்டரில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து வகையான தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூட மெக்சிகோ அரசு உத்தரவிட்டுள்ளதால் எங்களது மதுபான உற்பத்தியை நிறுத்துகிறோம். எனவே கொரோனா, மாடேலோ, பசிஃபிகோ ஆகிய பீர் வகைகளின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது", என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா நோய் தாக்கத்தால் கொரோனா பீர் விற்பனை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை எனவும், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கொரோனா பீரின் விற்பனை 9 சதவீதம் அளவுக்கு அதிகரித்ததாகவும் குரூபோ மாடேலோ நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.