கொரோனா வைரஸ்.. விலங்கில் இருந்தே மனிதர்களுக்கு பரவியது.. ஹு - சீனா கூட்டு ஆய்வில் தகவல்.. திருப்பம்!
பெய்ஜிங்: விலங்கில் இருந்தே கொரோனா மனிதர்களுக்கு பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் - சீனா இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வுஹன் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பின் உலகம் முழுக்க பரவியது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் எல்லாம் முடங்கியது. தற்போது உலகம் முழுக்க 127,796,657 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு, 2,796,756 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவிய நிலையில் அதன் தோற்றம் குறித்த கேள்வி எழுந்தன. கொரோனா வைரஸ் எப்படி தோன்றி, மனிதனிடம் பரவி இருக்கும் என்று கேள்விகள் எழுந்தன.
சர்ச்சைகள்
இது தொடர்பாக நிறைய சர்ச்சைகள், கேள்விகள் நிலவி வந்தன. கொரோனா வைரஸ் சீனா நடத்திய பயோ தாக்குதல், சீனாவில் உள்ள வுஹன் வைராலஜி ஆய்வு மையத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்துவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. அதே சமயம் இந்த வைரஸ் எறும்பு தின்னி அல்லது வெளவாலில் இருந்து பரவி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
மறுப்பு
கொரோனாவின் தோற்றத்தை கண்டுபிடிக்க சீனாவிற்கு உலக சுகாதார மையம் செல்ல நினைத்தது. ஆனால் முதலில் இதை அனுமதிக்காத சீனா தொடர் அழுத்தங்களுக்கு பின் உலக சுகாதார மைய அதிகாரிகளை ஆய்வு செய்ய அனுமதித்தது. சீன அதிகாரிகளும் உலக சுகாதார மைய அதிகாரிகளும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.
ஆய்வு
இந்த ஆய்வின் முழு அறிக்கை விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதன் முடிவு மட்டுமே தி அசோசியேட் பிரஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விலங்கில் இருந்தே கொரோனா மனிதர்களுக்கு பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் - சீனா இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கசிவு
ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்திருக்க வாய்ப்பே இல்லை. வெளவாலில் இருந்து வேறு விலங்குக்கு சென்று, அங்கிருந்து மனிதர்களுக்கு சென்று இருக்கலாம் என்று ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இனிமேலும் இதை ஆய்வக கசிவு என்று விசாரிப்பதை விட்டுவிட்டு, விலங்கிடம் இருந்து எப்படி மனிதர்களுக்கு சென்று இருக்கும் என்பதை விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சந்தேகம்
இதன் முழு அறிக்கை விரைவில் வெளியாகும். சீனாவிற்கு ஆதரவாக இந்த அறிக்கை இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு அறிக்கை முன்பே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் இது தாமதம் செய்யப்பட்டுவிட்டது. சீனாவின் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தின் பெயரில் ஆய்வு முடிவு மாற்றப்பட்டு இருக்கலாம் என்று பலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
ஆனால் என்ன
ஆனால் இன்னும் முழு அறிக்கை வெளியாகவில்லை. முழு அறிக்கை வெளியாகும் போது இதில் மாற்றங்கள் செய்யப்படலாம். அறிக்கையில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்படலாம். கடந்த வாரமே வெளியாக வேண்டிய முழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.