சிங்கப்பூர் விமானத்திற்குப் பின்னால் ஒளிந்தபடி பறந்ததா மலேசிய விமானம்??!!
கோலாலம்பூர்: மாயமாகியுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரேடார் பார்வையிலிருந்து தப்புவதற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்குப் பின்னால் மறைந்தபடி சென்றதாக ஒரு நூதனமான தகவல் வெளியாகியுள்ளது.
239 பேருடன் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்து உருப்படியான தகவல் இதுவரை வரவில்லை. விமானம் என்ன ஆனது, எங்கிருக்கிறது, விபத்துக்குள்ளானதா என்பதை விட அதுகுறித்த யூகங்கள்தான் நிறைய கிளம்பி வருகின்றன.
விமானம் காணாமல் போய் 10 நாட்களாகி விட்ட நிலையில் தற்போது கீத் லெட்ஜர்வுட் என்ற ஒரு விமானி, காணாமல் போன விமானம், இன்னொரு விமானத்திற்குப் பின்னால் ஒளிந்தபடி போயிருக்கலாம் என்ற வினோதமான ஒரு தகவலை வெ்ளியிட்டுள்ளார்.
தனது தம்ப்ளார் பக்கத்தில் இதை எழுதியுள்ளார் கீத். அதிலிருந்து சில சுவாரஸ்யமான பகுதிகள்...
இந்தியா - பாகிஸ்தான் மீது
சம்பந்தப்பட்ட போயிங் 777 விமானம் இந்தியா பாகிஸ்தான் மீது பறந்திருக்க வாய்ப்புள்ளது. தனது தகவல் தொடர்பு சாதனங்களை அது சுவிட்ச் ஆப் செய்துள்ளது. மேலும் தாழ்வாகவும் பறந்துள்ளது. இதனால்தான் அது ரேடார்களில் சிக்கவில்லை.
சிங்கப்பூர் விமானத்துக்கு பின்னால்
மேலும் இந்த விமானமானது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான அதே 777 போயிங் விமானத்துக்கு பின்னால் பறந்திருக்கலாம். இதனால் ரேடார் பார்வையில் சிங்கப்பூர் விமானம் மட்டுமே பட்டுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தப்பியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் பறந்தது ரேடாரில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் விமானத்தைப் பின் தொடர்ந்து
தற்போது அனைத்து விமானங்களிலும் விமானங்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கும் அதி நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்குப் பின்னாலேயே தொடர்ந்து வந்துள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் வி்மானத்தில், டிரான்ஸ்பாண்டர்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் தன்னை மலேசியன் ஏர்லைன்ஸ் விமான்ம் பின் தொடர்ந்து வந்ததை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பைலட்டால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது.
ரேடார் பார்வையிலிருந்து தப்பியதும் எஸ்கேப்
ரேடார் பார்வையிலிருந்து தப்புவதற்காக இப்படி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தொடர்ந்து சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரேடார் கண்ணிலிருந்து தப்பியதும், தனது வழியில் திரும்பி வேறு இடத்திற்குப் போயிருக்கலாம்.
ஆப்கானிஸ்தான் பகுதிக்கு
இந்தியா, பாகிஸ்தான் மீது பறந்த இந்த விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பக்கமாக போயிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கீத் கூறியுள்ளார்.
இப்படி நடக்க வாய்ப்புள்ளதா
இப்படி ஒரு விமானத்தைப் பின் தொடர்ந்து ரேடார் பார்வையிலிருந்து தப்பித்துச் செல்ல முடியுமா என்று கேட்டபோது, ஓய்வு பெற்ற அனுபவும் வாய்ந்த விமானி மைக்கேல் பார்ச்சூன் கூறுகையில், நடக்க வாய்ப்புள்ளது என்று கூறி நம்மை மேலும் ஆச்சரியமடை வைத்தார்.
ஆனால் ரேடாரைப் பொறுத்தது
மேலும் அவர் தொடர்கையில், இருப்பினும் சிங்கப்பூர் விமானத்தில் என்ன மாதிரியான ரேடார் பொருத்தப்பட்டிருந்தது என்பதைப் பொறுத்தது அது. இப்படிச் செய்வதற்கு மிகச் சிறந்த விமான தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். அது இருந்தால் இது சாத்தியம்தான் என்றார் மைக்கேல்.
அதெல்லாம் வாய்ப்பே இல்லை
ஆனால் டோக் மாஸ் என்ற இன்னொரு அனுபவம் வாய்ந்த விமானி கூறுகையில், இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. கீத் சொல்வது கதைக்கு நன்றாக இருக்கலாம். ஆனால் பிராக்டிகலாக இதற்கு வாய்ப்பே இல்லை. மிகப் பெரிய ராணுவ விமானங்கள் வேண்டுமானால் நெருக்கமாக பறக்க முடியும். ஆனால் போயிங் விமானத்தில் இது சாத்தியமில்லை என்றார்.
இன்னும் என்னென்ன கதையெல்லாம் வரப் போகுதோ....