மத்திய கிழக்கு நாடுகளில் சுழற்றி, சுழற்றி அடிக்கும் மணல்புயல்: 8 பேர் பலி
சனா: மத்திய கிழக்கு நாடுகளில் மணல்புயல் வீசுவதால் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கானோர் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான மணல்புயல் வீசி வருகிறது. லெபனான், சிரியா, இஸ்ரேல் மற்றும் சைப்ரஸில் மணல்புயல் வீசி வருகிறது. மணல்புயலால் சாலைகளில் எதிரே வருபவரை கூட காண முடியவில்லை. இந்நிலையில் மணல்புயல் தாக்கி 8 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் சுவாசப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
லெபனானில் போதிய வசதிகள் இன்றி வசித்து வரும் சிரியாவைச் சேர்ந்த அகதிகள் மணல்புயலால் அவதிப்பட்டு வருகிறார்கள். சிரியாவில் மணல்புயல் வீசுவதால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது குறைந்துள்ளது.
சிரியாவில் மட்டும் மணல்புயலால் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு 2 குழந்தைகள், மூதாட்டி உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர். பெகா பள்ளத்தாக்கு பகுதியில் மணல்புயலில் சிக்கிய 2 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மணல்புயலின் வேகம் அதிகமாக இருப்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.