மொத்தம் 24 நாட்கள்.. டெல்லி டூ ரஷ்யாவுக்கு "தடுப்பூசி சுற்றுலா".. ஒருவருக்கு கட்டணம் ரூ.2 லட்சமாம்!
ரஷ்யாவுக்கான தடுப்பூசி சுற்றுலா திட்டத்தை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது
மாஸ்கோ: இந்தியாவை சேர்ந்த சுற்றுலா ஏஜெண்டுகள், ரஷ்யாவுக்கான "தடுப்பூசி சுற்றுலா" திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.. ரஷ்யாவுக்கு, 24 நாட்கள் சுற்றுலா சென்று, அங்கேயே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டம்தான் இது.. இதற்கான கட்டணத்தையும் வெளியிட்டுள்ளனர்..!
இந்த 2 வருடமாகவே தொற்று பாதிப்பு உலக நாடுகளை பீடித்து வருகிறது.. அதனால் ஏராளமான நாடுகளில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.. அத்துடன் பொதுப்போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.
லாக்டவுன் போட்டுவிட்டதாலும், பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டு விட்டதாலும், சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. நஷ்டத்தை சந்தித்து வருகிறது.. இதனால், இந்த துறையை நம்பியுள்ளவர்களும் சேர்ந்தே பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.
விமான போக்குவரத்து
கடந்த ஒரு வருடமாகவே, பல்வேறு தீவிரமான முயற்சிகளை எடுத்த பிறகு, இப்போதுதான் பல நாடுகள் ஓரளவு தொற்றை கட்டுப்படுத்தி உள்ளன.. கட்டுக்குள்ளும் வைத்துள்ளன..அதனால், சுற்றுலா தலங்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளன.. ஆனால், விமான போக்குவரத்து இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை.
சுற்றுலா பயணிகள்
ஏராளமான நாடுகளில் தொற்று முழுவதுமாக குறையாமல் இருக்கிறது.. அதனால கொரோனா அச்சமும் மக்களிடம் முழுமையாக நீங்காமலும் உள்ளது.. இதனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்தியாவை சேர்ந்த சுற்றுலா ஏஜெண்டுகள், ரஷ்யாவுக்கான "தடுப்பூசி சுற்றுலா" திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அறிவிப்பு
அந்த அறிவிப்பில், "டெல்லியில் இருந்து மாஸ்கோ சென்று திரும்பும் விமான கட்டணம்: மாஸ்கோவில் 20 நாட்கள், செயின்ட் பீட்டர்ஸ் பர்கில் 4 நாட்கள், நட்சத்திர ஓட்டலில் அறை மற்றும் 24 நாட்களுக்குள், இரண்டு டோஸ் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசி ஆகியவை செலுத்தி கொள்ள, நபர் ஒருவருக்கு, 1.75 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. இந்த தடுப்பூசி சுற்றுலா செல்ல விரும்புவோர், புறப்படுவதற்கு முன்னதாக, ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்து, தொற்று இல்லை என்ற சர்டிபிகேட் பெற்றால் போதும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயார்
இதையடுத்து, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து பயணிகள் முதல்கட்டமாக பதிவு செய்துள்ளார்களாம்.. எனவே, இவர்கள் விரைவில் ரஷ்யாவுக்கு டூர் கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!