சீனாவில் மீண்டும் நிலச்சரிவு... 30 கட்டிடங்கள் புதைந்தது... 91 பேரின் கதி என்ன?
பெய்ஜிங்: சீனாவில் ஷென்சென் நகரில் நேற்று ஏற்பட்ட நிலச் சரிவில் 30-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய 91 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தெற்கு சீனாவில் உள்ள ஷென்சென் நகரில் தொழிற் பூங்கா அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கட்டடம் கட்டுவதற்காக தோண்டி எடுக்கப்பட்ட மண், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சுமார் 100 மீட்டர் உயரத்துக்கு மலை போல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மண் குவியல் நேற்று திடீரென சரிந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. மேலும், ஹென்கடையு பகுதியில் இயங்கி வரும் எரிவாயு நிறுவனத்துக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய் வெடித்துச் சிதறியது. இந்தப் பகுதியில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் இரண்டு தொழிலார்கள் விடுதிகள் உள்ளிட்டவை மண்ணுக்குள் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணியில், தீயணைப்புப் படையினர், போலீசார், சுகாதாரப் பணியாளர்கள் என 1500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். மண் சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து இதுவரை 14 பேர் உயிருடனும், 3 பேர் காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர். 91 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம், ஷேஜாங் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.