எம்எச் 370 விமானம் விழுவதிலிருந்து அதைக் காக்க முயன்றாரா பைலட் ஜஹாரி அகமது ஷா?
கோலாலம்பூர்: எனது சகோதரர் எப்போதும் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளவே மாட்டார். நிச்சயம் அவர் எம்எச் 370 விமானம் விபத்தில் சிக்குவதிலிருந்து அதைக் காக்கவே முயன்றிருப்பார் என்று மலேசியாவின் எம்எச் 370 விமான பைலட் ஜஹாரி அகமது ஷாவின் சகோதரி கூறியுள்ளார்.
தனது சகோதரர் ஒருபோதும் பயணிகளுக்கு விரோதமாக நடந்திருக்க மாட்டார். அவர்களை துயரத்தில் ஆழ்த்த விரும்பியிருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் ரீயூனியன் தீவுப் பகுதியில் ஒதுங்கிய விமான பாகங்கள் கடந்தாண்டு மார்ச் மாதம் மாயமான எம்எச் 370 விமானத்தின் பாகங்கள் என மலேசியா கூறியுள்ளது. மேலும் தற்போது கிடைத்துள்ள வால் பகுதியை வைத்துப் பார்க்கும்போது கட்டுப்பாட்டான வேகத்தில் வந்து விமானம் கீழே மோதியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் விமானி மீது சந்தேகம் வலுத்துள்ளது.
வேண்டுமென்றே விபத்து...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விமான நிபுணர் ஹேன்ஸ்போர்ட் கூறுகையில், ‘விமானத்தை வேண்டும் என்றே கடலில் விழ வைத்திருப்பது போலவே தெரிவதாக' கூறியுள்ளார்.
பயணிகளைக் காக்க முயற்சி?
அதேசமயம், விமானத்தில் கோளாறு ஏற்பட்டு தீவிலோ அல்லது கடலிலோ விமானத்தை இறக்கி பயணிகளைக் காக்க விமானி ஜஹாரி முயற்சித்திருக்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது.
அனுபவம் வாய்ந்தவர்...
சர்ச்சைக்குள்ளாகியுள்ள விமானி ஜஹாரி 1981ம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தவர். அனுபவம் வாய்ந்த விமானி. இவர் 18,000 மணி நேரங்களுக்கு மேல் பறந்துள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பு...
இந்த நிலையில் தனது சகோதரர் மீது தவறு இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்று அவருடைய சகோதரி சகினாப் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,, "பயணிகளின் பாதுகாப்புக்கு எனது சகோதரர் எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பார். ஒரு வேளை பிரச்சினை ஏற்பட்டிருந்தால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருப்பாரே தவிர மொத்தமாக அத்தனை பேரையும் அவர் கொன்றிருக்க மாட்டார்.
அப்பாவி...
அவர் ஒரு அருமையான மனிதர். உதவி தேவைப்படுவோருக்கு ஓடிச் சென்று உதவக் கூடியவர். அவர் ஒரு அப்பாவி. இளம் வயதிலிருந்தே விமானம் என்றால் அவருக்கு உயிர். விமானியாக துடித்துக் கொண்டிருந்தவர். பொம்மை விமானங்களை சிறு வயதில் ஓட்டி ரசிப்பார்.
கெட்டவர் அல்ல...
விமானம் ஓட்டுவதுதான் அவரது பொழுதுபோக்கும், உயிரும் ஆகும். இதற்காக அவர் நிறைய பணத்தை செலவிட்டுள்ளார். மேலும் அவரது வீட்டில் பொருத்தியிருந்த சிமுலேட்டர் குறித்து சந்தேகம் எழுப்புவது தவறு. அவர் கெட்டவர் அல்ல.
உற்சாகமான மனிதர்...
அவர் இருக்கும் இடம் உற்சாகமாக இருக்கும். அவர் கலந்து கொள்ளும் குடும்ப நிகழ்ச்சிகள் பட்டாசாக இருக்கும். தனது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்களுடந் இருக்கவே அவர் விரும்புவார்.
தாராள மனப்பான்மை...
தாராள மனப்பான்மையுடைய சேவை மனப்பான்மையுடைய சகோதரராக அவர் எங்களுக்கு இருந்தார். வெளிநாடு போய் விட்டுத் திரும்பும்போதெல்லாம் அவர் நிறைய கிப்ட்டுகளை வாங்கிக் கொண்டு வந்து எங்களை மகிழ்விப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.