ஒபாமா மகள்களை பாலோ செய்த காரின் மர்மம் விலகியது.. வழி தெரியாமல் வந்துட்டாராம் டிரைவர்!
வாஷிங்டன்: ஒபாமா மகளின் காரை நெருக்கமாக பின்தொடர்ந்து வந்த மற்றொரு காரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காரின் டிரைவர் போலீசாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.
பின்தொடர்ந்த கார்..
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மகள்கள் சாசா மற்றும் மலியா ஆகியோர் காரில் தங்களது குடியிருப்புக்கு சென்றுகொண்டிருந்தனர். பென்சில்வேனியா 17வது தெருவிலுள்ள வெள்ளை மாளிகை சோதனை சாவடியில் அவர்கள் காருக்கு வழிவிடுவதற்காக தடுப்புகள் அகற்றப்பட்டன. அப்போது பின்னால் இருந்து வந்த மற்றொரு கார் ஓபாமா மகள்கள் பயணித்த காரின் அருகே சென்று நின்றது. மேலும் தொடர்ந்து கார் செல்லவும் முயன்றது.
டிரைவர் கைது
பாதுகாப்பு சோதனைகள் இன்றி அந்த கார் உள்ளே நுழைய முற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படைவீரர்கள், உடனடியாக தடையை ஏற்படுத்தி காரை சுற்றி வளைத்தனர். பின்னர் கார் டிரைவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
தீவிரவாதிகள் சதி என அச்சம்
வெள்ளை மாளிகையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் இச்சம்பவம் நடந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் விமர்சனம் செய்தன. அதிபர் மகள்களுக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது.
அரசு ஊழியர்
இதனிடையே கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் மாத்யூ கோல்ட்ஸ்டெயின் என்பதும் வயது 55 என்பதும் தெரியவந்தது. அவர் உள் வருவாய் துறையின் ஊழியர் என்றும் விசாரணையின்போது தெரியவந்தது.
பாதை தெரியாமல் போய் சிக்கினார்
இதையடுத்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வாஷிங்டன் நகருக்கு தான் புதியவன் என்பதால் தெரியாமல் ஒபாமா மகள்கள் சென்ற பாதையில் நானும் சென்றுவிட்டேன் என்று நீதிமன்றத்தில் மாத்யூ தெரிவித்தார். இதையடுத்து அவரை விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தடையுடன் விடுதலை
அதே நேரம், வெள்ளை மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டதன்பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.