நேபாளம், பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய வீடுகளால் மக்கள் அச்சம்!
காத்மாண்டு: பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோளில் 4.5 ஆகவும், நேபாளத்தில் 5.5 ரிக்டர் அளவும் பதிவாகியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.14 மணியளவில் பாகிஸ்தானில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 30.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.51 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதேபோல ஜனவரி 3 ஆம் தேதி பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, இன்று அதிகாலையில் நேபாளத்திலும் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 2.36 மணியளவில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
27.79 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 85.75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள், பாதிப்புகள் குறித்து எந்தவிதமான உறுதியான தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications