இங்கிலாந்து: தோல்வியைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் மிலிபாண்ட்!
இங்கிலாந்து : பிரிட்டன் பொதுத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கத் தவறியதைத் தொடர்ந்து அக்கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் வேட்பாளர் எட் மிலிபாண்ட் பதவி விலகினார்.
பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் இரண்டாவது முறையாக மீண்டும் அந்த நாட்டின் பிரதமர் ஆகிறார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 இடங்களுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நள்ளிரவுமுதல் வெளியாகத் தொடங்கின.
இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 329 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆட்சி அமைக்க 326 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன்படி பெரும்பான்மை பலத்தை ஆளும் கட்சி பெற்றுள்ளது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் விட்னி தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியுடன் கூட்டணியில் இடம் பெற்றிருந்த லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. அந்தக் கட்சி கடந்த தேர்தலில் 57 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தமுறை அந்தக் கட்சிக்கு 8 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 233 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான எட் மிலிபாண்ட், வடக்கு டான்காஸ்டர் தொகுதியில் வெற்றி பெற்றார். இதையடுத்து தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தொழிலாளர் கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.