இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே வருகைக்கு எதிர்ப்பு- யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம்: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க தமிழர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தது ராணுவம். இதனால் யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள், ஈழத் தமிழரின் தாயகப் பகுதியாகும். இப்பகுதியில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்கள் நிலை என்ன? காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட உறவினர்களை மீட்டு தர வேண்டும் என்பதை முன்வைத்து பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் போராடும் தமிழருக்கு உரிய நீதி இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு பகுதியின் யாழ்ப்பாணத்தில் பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே வருகை தந்தார். ரணிலின் இந்த வருகைக்கு எதிராக போராட்டங்களை நடத்த யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் ஒன்று திரண்டு ரணில் வருகைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ராணுவம், போலீசார் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஒருகட்டத்தில் போராட்டத்தினர் மீது தண்ணீரை பாய்ச்சி ஒடுக்கவும் முயற்சித்தனர். ஆனாலும் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்பின்னர் யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் தேசிய தைப் பொங்கல் விழாவில் ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது: சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார சுபீட்சத்தை அடைந்த நாடொன்றை உருவாக்கும் நோக்குடன் 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கை எனும் தனித்துவத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.

எமது நாட்டுக்கு நல்லிணக்கம் அவசியமானது. 30-40 வருடங்களுக்கு மேலாக யுத்தம், மோதல்கள்.குழப்பங்கள் மற்றும் பிரிவினைவாத ,இனவாத வங்குரோத்து அரசியல்களினால் நாடு பிரிந்திருந்தது. நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்காக 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்சினையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். இதனை கலந்துரையாடி செயற்படுத்த இருக்கிறோம்.இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம். வறுமை,பட்டினி,தொழிலின்மை என்பன தமிழ் ,சிங்கள மக்களுக்கு மட்டுப்படவில்லை. அனைவரும் கஷ்டப்படுகின்றனர். அனைவரும் இணைந்து தான் கரைசேர வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் ஆராய வேண்டி இருக்கின்றன. மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகளையும் பாராளுமன்ற கட்சித் தலைவர்களையும் அழைத்து இரண்டாம் கட்ட பேச்சு நடத்த இருக்கிறோம். மலையக தமிழ் மக்களை எமது சமூகத்துக்குள் உள்வாங்கி ஏனைய மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே பேசினார்.












Click it and Unblock the Notifications