மலேசிய காட்டில் கால் உடைந்து 3 நாட்கள் தவித்த இந்தியர்- கிராம மக்களால் மீட்பு!
கோலாலம்பூர்: மலேசியாவில் கார் விபத்தில் கால் உடைந்த நிலையில் உதவிக்கு ஆள் இல்லாமல் காட்டில் தவித்த இந்தியர் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
மலேசியா ராணுவ முகாமில் பணியாற்றும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நிக்கோலஸ் ஆண்ட்ரூ மற்றும் அவரது நண்பர் தியாகராஜன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுகொண்டிருந்தனர்.
மத்திய மலேசியாவின் பிதார் அருகே மலைப்பாதையில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து 20 மீட்டர் ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்தது.
இறந்து போன தியாகராஜன்:
இதில் தியாகராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். நிக்கோலசின் வலது கை மற்றும் கால் உடைந்துவிட்டது. இதனால், பள்ளத்தாக்கை விட்டு வெளியேற முடியாமல் துடித்த அவர், தவழ்ந்துகொண்டே அங்குமிங்கும் சென்றுள்ளார்.
கிராம மக்கள் உதவி:
ஓடையில் வரும் தண்ணீரை மட்டுமே குடித்து, மரத்தடியில் தூங்கியுள்ளார். 3 நாட்களுக்குப் பிறகு அவரது கூக்குரல் கேட்டு கிராம மக்கள் அவருக்கு உதவி செய்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
வரும் வழியில் விபத்து:
தான் உயிர்பிழைத்தது பற்றி நிகோலஸ் கூறுகையில், "எனது சகோதரரின் திருமண அழைப்பிதழ்களை அனுப்பி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் விபத்து ஏற்பட்டது.
காயத்தினால் கடுமையான வலி:
பள்ளத்தாக்கில் இருந்து மேலே ஏறி உதவி கேட்க நினைத்தேன். ஆனால், காயத்தினால் ஏற்பட்ட கடுமையான வலியால் ஏற முடியவில்லை. அதனால், தவழ்ந்துகொண்டே அப்பகுதியைக் கடக்க முடிவு செய்தேன்.
கிராம மக்களிடம் கோரிக்கை:
கிராமவாசிகள் சிலரைப் பார்த்தபோது உதவி செய்யும்படி கத்தினேன். அவர்கள் விரைந்து வந்து உதவி செய்தனர்" என்றார்.