இந்தியா உடன் நெருக்கம்! அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர்.. யார் இந்த ஷின் சோ அபே?
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே இன்று அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Recommended Video
ஜப்பான் நாட்டின் நாரா பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகே அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷின் சோ அபே மக்கள் முன் உரையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஷின் சோ அபே நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பின்னால் இருந்து 2 முறை தாக்குதல்! சரிந்து விழுந்த ஜப்பான் மாஜி பிரதமர்! ஷின்சோ சுடப்பட்டது எப்படி?
யார் இவர்
இதையடுத்து ஷின் சோ அபே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூட தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே இந்தியா உடன் நல்ல ஒரு உறவைக் கொண்டு இருந்தவர். அவர் ஜப்பான் பிரதமராக இருந்த சமயத்தில் தான், இந்தியா உடன் ஜப்பான் நெருக்கம் காட்டியது. புல்லட் ரயில் திட்டம் வந்தது எல்லாம் அவரது பதவிக் காலத்தில் தான். இப்படி இந்தியா உடன் நெருக்கிய உறவைக் கொண்ட ஷின் சோ அபே யார்? அவரது சாதனைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
செல்வாக்கு மிக்க குடும்பம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 1954ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி பிறந்தவர் ஷின் சோ அபே. அவர் சக்திவாயந்த் ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா கிஷி நோபுசுகே 1957 முதல் 1960 வரையும் அவரது சடோ ஈசாகு 1964 முதல் 1972 வரை ஜப்பான் பிரதமராக இருந்துள்ளனர். டோக்கியோவில் உள்ள சீகேய் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அபே, அமெரிக்கா தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்தார்.
முதல்முறை
1979இல் அவர் ஜப்பானுக்குத் திரும்பிய அவர், லிபரல்-டெமாக்ரடிக் கட்சியில் (LDP) தீவிரமாகச் செயல்பட்டார். மேலும் 1982இல் அவர் ஜப்பானின் வெளியுறவு அமைச்சராக இருந்த தனது தந்தை அபே ஷிண்டாரோவின் செயலாளராக பணியாற்றத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பல முக்கிய பதவிகளில் பணியாற்றி உள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு அவர் ஜப்பான் நாட்டின் பிரதமராக முதல்முறையாகப் பொறுப்பு ஏற்றார்.
ஒரே ஆண்டு
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிறந்த முதல் ஜப்பான் பிரதமர் மற்றும் இளம் வயதில் பிரதமர் பதவி ஏற்றவர் என்ற சிறப்பை அவர் பெற்றார். பழமைவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் கூட அபே, அமெரிக்கா உடனான நல்ல ஒரு உறவைக் கொண்டு இருந்தார். இருப்பினும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் இவரது அரசு சிக்கியது. இதனால் பெரும்பான்மை இழந்து ஒரே ஆண்டில் 2007இல் அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார்.
இரண்டாம் முறை
அதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் கடந்த 2012இல் அவர் மீண்டும் ஜப்பான் பிரதமர் ஆனார். ஆட்சியைப் பிடித்த உடனேயே நீண்ட காலமாக நலிந்திருந்த ஜப்பானியப் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர நடவடிக்கையை எடுத்தார். பணப் புழக்கத்தை அதிகரிப்பது, அரசு செலவுகளை அதிகரிப்பது உள்ளிட்ட திட்டங்களை அவர் முன்னெடுத்தார். இதனால் வேலையின்மை குறைந்த நிலையில், 2014இல் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலைச் சந்தித்தார். அதிலும் வென்று பிரதமர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்.
அதிக காலம் பிரதமராக இருந்தவர்
அதைத் தொடர்ந்து 2017இல் மேலும் சில ஊழல் புகார்கள் கிளம்பின. இதனால் அவரது மக்கள் செல்வாக்கும் கடுமையாகச் சரிந்தது. இருப்பினும், தைரியமாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார் அபே. அதில் குறைந்த அளவு வாக்குப்பதிவு இருந்தாலும் கூட, பிரதமர் பதவியை அவர் தக்க வைத்துக்கொண்டார். ஜப்பான் நாட்டில் அதிக காலம் பிரதமராக இருந்தவர் என்ற சிறப்பை கடந்த 2019இல் அவர் பெற்றார்.
ராஜினாமா
அடுத்த முறையும் தேர்தலில் அபே வெல்ல வாய்ப்புகள் மிக அதிகம் என்று கூறப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆகஸ்ட் 2020இல் அபே பதவி விலகுவதாக அறிவித்தார். நீண்ட காலமாகப் பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நலம் மோசமானதால், மருத்துவரின் அறிவுறுத்தல் படி ஓய்வு எடுக்க முடிவு செய்து தனது பிரதமர் பதவியில் இருந்து அபே விலகினார்.
இந்தியா உடன் நெருக்கம்
அபே பிரதமராக இருந்த சமயத்தில் ஜப்பான்-இந்தியா உறவை மேம்படுத்த அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஆகஸ்ட் 2007இல் அவரது மூன்று நாள் இந்தியப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மீண்டும் கட்டி எழுப்பத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இந்தியா உடன் அவர் காட்டிய நெருக்கும் ஆசியாவில் சீனாவுக்குப் பதிலடி கொடுக்க உதவிய அதே நேரத்தில், ஜப்பான் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவியது.
புல்லட் ரயில் திட்டம்
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புல்லட் ரயில் திட்டம் அவரது ஆட்சிக் காலத்தில் தான் முன்னெடுக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 2013இல் அவர் பிரதமராக இருந்த சமயத்தில் தான் மும்பை-அகமதாபாத் பாதையின் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜப்பானும் கையெழுத்திட்டன.
அடிக்கல் நாட்டினார்
இதற்கு இரு நாடுகளும் நிதி அளிக்கும் என 29 மே 2013இல் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோருக்கு இடையேயான கூட்டு அறிக்கை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து தீவிரமான ஆய்வுக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இணைந்து தான் கடந்த 2017 செப்டம்பரில் புல்லட் ரயில் திட்டத்திற்காக அகமதாபாத்தில் அடிக்கல் நாட்டினர்.