இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு.. பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொந்தளிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கொந்தளித்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தார். இவர் தலைமையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
இவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் (பிடிஐ) எனும் கட்சியை துவக்கி அரசியலில் நுழைந்தார்.
இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு.. காலில் தாக்கிய குண்டுகள்.. இனி 3 வாரத்திற்கு நடக்க முடியாது!
இம்ரான் கான் போராட்டம்
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் அவரது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 2018 முதல் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தான் இம்ரான் கானின் கூட்டணி ஆட்சி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் ஆட்சியையும், பிரதமர் பதவியையும் இழந்தார். புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் தேர்வாகி உள்ளார.
காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு
இந்நிலையில் தான் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் போராட்டம் நடத்தி வருகிறார். பாகிஸ்தான் பஞ்சாப் மகாணம் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் இன்று பிரம்மாண்ட பேரணி நடந்தது. அப்போது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது இம்ரான் கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அபாய கட்டத்தை கடந்துவிட்டாலும் கூட அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இம்ரான் கானின் கட்சியினர் தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இம்ரான் கான் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
பாபர் அசாம்-வாசிம் அக்ரம்
உலககோப்பை டி20 போட்டியில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ இம்ரான் கான் மீதான இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அல்லாவே, பாகிஸ்தானை பாதுகாப்பாக காக்க வேண்டும்'' என பதிவு செய்துள்ளார். இதேபோல் முன்னாள் வீரரும், கேப்டனுமாக வாசிம் அக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛வஜிராபாத்தில் நடந்த நிகழ்வை நினைத்து கவலையடைகிறேன். இம்ரான் மற்றும் அங்குள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்த சமயத்தில் ஒரு நாடாக நாம் ஒன்றுபட வேண்டும். நமது தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது'' என கூறியுள்ளார்.
அக்தர்-ஹபீஸ்
மேலும் முன்னாள் வீரர் சோயப் அக்தர், ‛‛ இம்ரான் கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதை கேள்வி பட்டேன். அல்லாவின் அருளால் அவர் நலமாக உள்ளார். இந்த தாக்குதலை கண்மூடித்தனமானது. இதனை கடுமையாக கண்டிக்கிறேன்'' என வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் முகமது ஹபீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ இம்ரான் கான் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். விரைவில் மீண்டு வர வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.