சவுதி அரேபியா கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி; 11 பேர் படுகாயம்
ரியாத்: சவுதி அரேபியாவின் ஜூபயில் நகரில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயமடைந்தனர். மேலும் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஜூபயில் என்ற பகுதியில் யுனைடெட் கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 11.40 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் வேதிப்பொருள்கள் உள்ள அறையில் வழக்கமான பராமரிப்பு பணியின் போது இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 12 பேர் தீயில் சிக்கி பலியாகினர். 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.