இந்திய கிரிக்கெட்டில் முதல் நேர்மையான நடவடிக்கை..சி.எஸ்.கே., ஆர்.ஆர். தடை பற்றி லலித் மோடி கருத்து..
லண்டன் : ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, இந்திய கிரிக்கெட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் நேர்மையான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அமைத்த ஆர்.எம். லோதா தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த தீர்ப்பையடுத்து லண்டனில் உள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி அடுத்தடுத்து ட்விட்டரில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதில், லோதா குழுவின் அறிக்கை முதல்கட்ட நடவடிக்கைதான். இது முடிவு அல்ல. ஆனால், தொடக்கத்திற்கான ஒரு புள்ளி. நேர்மையான நீதிபதியிடம் இருந்து சிறப்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் முதல் நேர்மையான முடிவு பி.சி.சி.ஐ.க்கு வெளியில் இருந்து வந்துள்ளது. இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜஸ்தான், சென்னை அணிகள் எளிதான தண்டனையில் தப்பிவிட்டதாகவும் ஆயுள் முழுவதும் இவ்விரு அணிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் ஐ.சி.சி பொறுப்பில் இருந்து சீனிவாசன் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் லலித் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.