தமிழக மீனவர்கள் குற்றவாளிகளே- இந்திய நட்புக்காகவே விடுதலை: சொல்வது மகிந்த ராஜபக்சே
காத்மாண்டு: இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் குற்றவாளிகளே.. அவர்களை இந்தியாவின் நட்பு கருதியே விடுதலை செய்தேன் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
நேபாளாத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று வரும் சார்க் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி நேற்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்ததற்காக ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இதன் பின்னர் தி இந்து நாளிதழில் பணியாற்றும் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் மகள் சுஹாசினி ஹைதர், ராஜபக்சேவிடம் பேட்டி எடுத்திருக்கிறா. அதில் ராஜபக்சே கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் இலங்கையுடன் நல்லுறவை தொடர்ந்தார். அவரது வெளியுறவுக் கொள்கையின் விளைவாகத்தான் 5 மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்தேன்.
5 தமிழக மீனவர்கள் அப்பாவிகள் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. 5 தமிழக மீனவர்களும் குற்றவாளிகளே. அவர்களுக்கு எங்களது நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதனைவிட இந்தியாவின் நட்புறவு முக்கியம் என்றே நான் கருதியதால் அப்படி ஒரு நிலைப்பாடு எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, வைகோ இந்தியாவின் ஒரு தலைவர்.. நான் எப்படி பதில் சொல்ல முடியும்.
இவ்வாறு ராஜபக்சே கூறியுள்ளார்.