குண்டு மழை பொழிந்தாலும்.. அமைதியாக கால்பந்து போட்டிகளை ரசிக்கும் ஈராக்கியர்கள்!
பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டைய ரணகளப்படுத்தி வரும் நிலையிலும் கூட ஈராக்கியர்கள், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியைப் பார்த்த ரசிக்க தவருவதில்லை.
பாக்தாத் நகரில், வீடுகளிலும், பொது இடங்களிலும் பெரும் திரளான மக்கள் டிவிகளில் கால்பந்துப் போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல் குறித்து சற்றும் கவலைப்படாத தீவிர ரசிகர்களாக இவர்கள் உள்ளனர்.
கால்பந்து எங்களை இணைக்கிறது
இதுகுறித்து 30 வயதான டாக்ஸி டிரைவர் ராத் கூறுகையில், கால்பந்துப் போட்டி எங்களை இணைக்கிறது. இங்குள்ள பேஸ்புக் கபேதான் நான் அடிக்கடி வரும் இடம். இங்கு அமர்ந்து நண்பர்களுடன் கால்பந்துப் போட்டிகளை ரசித்துப் பார்க்கிறேன் என்றார் அருகில் இருந்த ஹூக்காவிலிருந்து புகை பிடித்தபடி.
கவலை, பதட்டத்தை மறைக்க
எங்களைச் சுற்றி நிற்கும் கவலைகள், பதட்டங்கள், பயத்தை மறைக்க இதுதான் எங்களுக்கு உள்ள ஒரே வழி என்பது ராத் தெரிவிக்கும் கருத்தாகும்.
எப்ப வேணும்னாலும் கார் வெடிக்கும்
எங்களது வாழ்க்கை நிலையற்றது. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் குண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடிக்கலாம். ஏன் மனித வெடிகுண்டு நபர் இங்கு வந்து குண்டை வெடிக்கச் செய்யலாம் என்றும் சிரித்தபடி கூறுகிறார் எதார்த்தத்தை வெளிப்படுத்தியபடி.
வரலாறு காணாத தாக்குதலில் ஈராக்
ஈராக் தற்போது சன்னி பிரிவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் தாக்குதலில் பல நகரங்கள் வீழ்ந்துள்ளன. பாக்தாத் மட்டும் சற்று தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் படையினரும், காவல்துறையினரும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
விளையாட்டுதான் மனதுக்கு மருந்து
ஆனால் ஈராக்கியர்களுக்குக் குறிப்பாக பாக்தாத் வாசிகளுக்கு கால்பந்துப் போட்டிதான் இப்போதைக்கு நல் மருந்தாக அமைந்துள்ளது.