"உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்குத் தான் முன்னுரிமை.." மத்திய அரசு திட்டவட்டம்
டெல்லி: உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று போரை ஆரம்பித்துள்ளது. முதல் நாளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட விமான தளங்கள் உட்பட 74 ராணுவ தளங்களை ரஷ்யா அழித்துள்ளது.
இதனிடையே அங்கு சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகவும் அவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

முன்னுரிமை
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா, "உக்ரைன் நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதும், அங்கிருந்து இந்தியர்களைப் பத்திரமாக வெளியேற்றி தாயகம் அழைத்து வருவதும் தான் அரசின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எத்தனை பேர்
உக்ரைன் நாட்டில் மாணவர்கள் உட்பட மொத்தம் 20,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 4,000 பேர் கடந்த சில நாட்களில் ஏற்கனவே உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைன் நாட்டில் தற்போது நிலைமை கடினமாக உள்ளது. அங்கு மிக வேகமாகச் சூழ்நிலை மாறி வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

அண்டை நாடுகள்
உக்ரைன் நாட்டுடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ள ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில் இருந்து இந்த நாடுகளுக்கு உதவும் நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் கவனிப்பார்கள்.
Recommended Video

வேறு வழிகள்
இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களை மீட்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் உக்ரேனிய வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், அங்குச் சிக்கியுள்ள இந்தியர்களை, அண்டை நாடுகளின் உதவியுடன் தரை வழியாக அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications