தாய்லாந்து புத்த கோவிலில் 40 புலிக் குட்டிகளின் உடல்கள் கண்டெடுப்பு
கான்சானபுரி: தாய்லாந்தில் உள்ள புத்த கோவிலில் குளிர் சாதன பெட்டி ஒன்றில் நாற்பது புலிக் குட்டிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள கான்சானபுரி மாகாணத்தில் ஒரு புத்தர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் தங்கியுள்ள புத்தபிட்சுக்கள் புலிகளை வளர்த்து வருகின்றனர். அவை வீட்டு செல்ல நாய்கள் போன்று மிக சாதாரணமாக சாதுவாக உலாவருகின்றன.
புத்தபிட்சுக்கள் இங்கு புலிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து வளர்ப்பதாகவும், அவற்றுக்கு போதை மருந்து வழங்கி வசீகரித்து வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அங்கு வன விலங்குகள் கடத்தி வரப்பட்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டினர்.
இதையடுத்து அந்த கோவிலிருந்து புலிகளை அகற்றும் நடவடிக்கையை வன அதிகாரிகள் கடந்த மே 30-ம் தேதி தொடங்கினர். அதன்படி வெளியேற்றப்படும் புலிகள் தாய்லாந்தில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் விடப்படுகின்றன.
இந்நிலையில் கோவிலின் உள்ள இருந்த குளிர்பதன பெட்டியில் 40 புலிக்குட்டிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புலியின் பாகங்கள் சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் என்றும் அதற்காக இப்புலிகளை கோவிலில் கொன்று வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ள இந்தப் புத்த கோவில் மூலம் வருடத்திற்கு பல மில்லியன் டாலர் அளவு வருமானம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து வன உயிர்கள் கடத்தப்படுவதாகவும் அதனை தவறாக நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து வன உயிரினங்கள் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விலங்கின ஆர்வலர்கள் இந்த புத்த கோவிலை மூடுவதற்காக நெடுங்காலமாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.