ஜல்லிக்கட்டுக்கு கடல் கடந்தும் பெருகும் ஆதரவு.. ஜெர்மனியில் பேரணி நடத்திய தமிழர்கள்
ஜெர்மனி நாட்டின், பிராங்பேர்ட் நகரில் தமிழ் பெண்களும், ஆண்களும் பதாகைகளை ஏந்தியபடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.
பெர்லின்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜெர்மனியில் தமிழர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
காளையை காட்சி பட்டியலில் சேர்த்ததன் மூலம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் உள்ளது. காளையை பட்டியலில் இருந்து நீக்கி சட்ட திருத்தம் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது மத்திய அரசு. மேலும் அவசர சட்டம் பிறப்பிக்கவும் அது பின்வாங்குகிறது.
தமிழக கட்சிகளை பொறுத்தளவில் மத்திய அரசிடம் நெருக்கடி கொடுத்து ஜல்லிக்கட்டு நடத்த சட்டத் திருத்தம் செய்ய வைப்பதில் படுதோல்வி அடைந்துள்ளன.
வீதியில் இறங்கிய மக்கள்
இந்த சூழ்நிலையில் மக்கள் தன்னெழுச்சியாக தங்கள் கலாசாரத்தை காப்பாற்ற வீதிகளில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, மாணவர் சமூகத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தை நினைவுகூறும் வகையில் மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி வருகிரார்கள்.
சமூக ஊடகங்கள்
பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்கள் போராட்ட களத்திற்கு விரைகிறார்கள். நேற்று நெல்லையில் நடந்த இளைஞர்கள் போராட்டத்திற்கு சமூக ஊடகங்கள் வாயிலாகவே ஆதரவு பெருகியது. ஒரே நாள் அறிவிப்பில், பெங்களூர், சென்னை நகரங்களில் இருந்து வாகனங்களில் விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
வெளிநாடுகளில் தர்ணா
இதேபோல வெளிநாடுகளிலும் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் பென்டோன்வில் நகரத்தின் மைய பகுதியில் திரண்ட சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி நின்றனர்.
ஜெர்மனியில்
அதேபோல ஜெர்மனி நாட்டின், பிராங்பேர்ட் நகரில் தமிழ் பெண்களும், ஆண்களும் பதாகைகளை ஏந்தியபடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அங்குள்ள காளை சிலை அருகே கூடிய மக்கள், ஜல்லிக்கட்டு ஆதரவு பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களிடம் ஏற்பட்டுள்ள உணர்வுப்பூர்வ எழுச்சி, தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி போராட்ட களத்தை சூடு பறக்க செய்கிறது.