கானா பெட்ரோல் பங்க் தீவிபத்து... பலியானவர்கள் எண்ணிக்கை 150 ஆனது!
அக்ரா: கானா நாட்டில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீப்பிடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கானா நாட்டில் 3 நாட்கள் அரசு துக்கம் அறிவிக்கப் பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது கானா நாடு. இந்நாட்டின் தலைநகர் அக்ராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், அக்ராவில் உள்ள பெட்ரோல் பங்கு ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு மழைக்காக ஒதுங்கியிருந்த மக்கள் சிக்கினர். தீ மளமளவென அக்கம் பக்கத்தில் சுற்றியிருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், இந்த தீவிபத்தில் சிக்கி 150 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீட்கப் பட்ட சடலங்களில் பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு கரிக்கட்டைகளாக கிடப்பதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தீயில் சிக்கி பலியானர்வர்கள் தவிர மேலும் பலர் மழை வெள்ளத்தில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அஞ்சப் படுகிறது. இந்த தீவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் பல மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின. பெட்ரோல் போடுவதற்காக பயணிகளுடன் அங்கு வந்த பேருந்தும் தீப்பிடித்ததால், அதிலிருந்த பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
150 பேர் பலியான இந்த விபத்திற்கு கானா அதிபர் ஜான் டிராமன் மகாமா அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கானா நாட்டில் 3 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications