குட்நியூஸ்,சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் மீட்பு..டிராபிக் விரைவில் சரியாகும்..ஆனால் வணிக பாதிப்பு?
கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த கப்பல் 6 நாட்கள் தீவிர போராட்டத்திற்குப் பின், வழக்கமான பாதைக்குத் திருப்பப்பட்டுள்ளதாகக் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாகவே சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் குறித்த செய்திகள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்வேச அளவில் நடைபெறும் வணிகத்தில் சுமார் 15% வணிகம் இந்த சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது.
அப்படிப்பட்ட முக்கியமான கடல்வழி பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்தது.
இந்திய மதிப்பில் இவ்வளவு கோடியா? ஒரு கப்பலால் வந்த வினை.. சூயஸ் கால்வாய் அடைப்பால் பெரும் இழப்பு!
நடந்தது என்ன
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, ஜப்பான் நாட்டிற்குச் சொந்தமாக எவர் கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயை வழக்கம் போல கடக்க முயன்றது. ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக அங்குப் பலத்த காற்று அடித்தாக கூறப்படுகிறது. இதனால் திடீரென்று பாதை மாறிய கப்பல், கால்வாயில் பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது. இருப்பினும், இது மனித தவறால் நிகழ்ந்திருக்கலாம் என்றும் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்,
மீட்கும் பணிகள் தீவிரம்
இதனால் சர்வதேச வணிக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கால்வாயின் இரண்டு புறமும் பல கப்பல்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் எவர் கிரீன் கப்பலை மீட்கும் பணிகளை எகிப்து அரசு வேகப்படுத்தியது. கப்பல் அடியில் சிக்கியிருந்த மணலை நீக்கும் பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, இழுவை கப்பல்களைக் கொண்டு கப்பலை மீண்டு வழக்கமான பாதைக்குத் திருப்பிவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எவர் கிரீன் கப்பல் மீட்பு
எகிப்து விரைவாக இந்தப் பணிகளை மேற்கொண்டதால் நேற்று கப்பல் மிதக்கத் தொடங்கியது. கப்பலில் எவ்வித தொழில்நுட்ப பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் அதை வழக்கமான பாதைக்குத் திருப்பிவிடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து சுமார் 6 நாட்கள் கடும் போராட்டத்திற்குப் பின்னர் தற்போது கப்பல் வழக்கமான பாதைக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து எப்போது சரியாகும்
மேலும், சூயஸ் கால்வாயில் தற்போது மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளதாகவும் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இரண்டு புறமும் சுமார் 360க்கும் மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. தினசரி சுமார் 100 கப்பல்கள் மட்டுமே கால்வாயைக் கடக்க முடியும் என்பதால் போக்குவரத்து மீண்டும் சரியாக 2-3 நாட்கள் வரை ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச வணிக பாதிப்பு
சூயஸ் கால்வாயில் போக்குவரத்து சுமார் 6 நாட்கள் முடங்கியிருந்தது. இதனால் சர்வதேச அளவில் வணிக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 6% வரை உயர்ந்திருந்தது. இந்தச் சம்பவத்தால் சர்வதேச வணிகத்தில் ஏற்பட்ட பாதிப்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் வரைகூட ஆகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.