இறந்த மனைவியின் நினைவாக 7 கிமீ தூரம் சூரியகாந்தி செடிகளை வளர்க்கும் கணவர்
விஸ்கான்சின்: அமெரிக்காவில் புற்றுநோயால் இறந்த தனது மனைவியின் நினைவாக முதியவர் ஒருவர் நெடுஞ்சாலையின் இருபுறங்களும் 7 கிலோமீ்ட்டர் தூரத்திற்கு சூரியகாந்தி செடிகளை வளர்த்துள்ளார்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள யூ கிளெய்ரைச் சேர்ந்தவர் டான் ஜாக்கிஷ்(65). விவசாயி. அவரது மனைவி பாபட்(66). அவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். கடந்த 2000ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு பாபட்டுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
பாபட்டுக்கு சூரியகாந்தி பூ என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர்களின் நிலத்தில் ஏராளமான சூரியகாந்தி செடிகளை வளர்த்து வந்தனர். சூரிய காந்தி விதைகளை விற்று புற்றுநோயாளிகளுக்கு நிதி உதவி செய்ய முன் வந்தார் பாபட். அதன்படி சூரியகாந்தி விதைகளை விற்று புற்றுநோயாளிகளுக்கு உதவி செய்து வந்த அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது 66வது வயதில் மரணம் அடைந்தார்.
அவர் இறந்த பிறகு அவர் நினைவாக அவருக்கு பிடித்த சூரியகாந்தி செடிகளை யூ கிளெய்ர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் வளர்க்க முடிவு செய்தார் டான். அவரின் இந்த முடிவு பற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் நெடுஞ்சாலையோரம் உள்ள தங்கள் நிலங்களை அவருக்கு குறைந்த விலையில் வாடகைக்கு விட்டனர். இதையடுத்து அவர் 7 கிலோமீட்டர் தூரம் விதைகளை தூவினார். இதற்கு அவருக்கு ஒரு வாரம் ஆனது.
இந்நிலையில் செடிகள் தற்போது வளர்ந்து பூத்து அந்த பகுதியே அழகாக உள்ளது. பாபட் நினைவாக டான் சூரியகாந்தி விதைகளை விற்று புற்றுநோயாளிகளுக்கு தொடர்ந்து உதவ முடிவு செய்துள்ளார்.