ஆப்கானிஸ்தான் டிவி நிலையத்தில் கடும் துப்பாக்கிச் சண்டை
ஆப்கானிஸ்தான் ரேடியோ, டிவி நிலையத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையத்தில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை முதல் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. இதில் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் தலிபான், அல் காய்தா தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை அந்நாட்டின் ஜலாலாபாத் அருகில் உள்ள நங்கர்ஹர் நகரில் ரேடியோ மற்றும் டிவி நிலையத்தை முற்றுகையிட்ட தீவிரவாதிகள் சரமாரியாக சுடத்தொடங்கினர்.
இதுதொடர்பாக செய்திகள் வெளியிட்டுள்ள வெளிநாட்டு ஊடகங்கள், 'இன்று காலை 10 மணிக்கு இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது என்றும் உயிரழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவிலை என்றும் கூறியுள்ளன.
ரேடியோ மற்றும் டிவி நிலையத்தில் 40 பேர் பணியாற்றினார்கள் என்றும் அவர்களில் பெரும்பான்மையோர் தப்பிவிட்டனர் என்றும், உள்ளே ஒரு சிலர்தான் சிக்கியுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.