முந்தைய அரசுகளின் பழமையான சட்டங்களை நீக்குவதில் மகிழ்ச்சி.: ஆஸி.யில் பிரதமர் மோடி பேச்சு
சிட்னி: இந்தியாவில் முந்தைய அரசுகள் பழமையான சட்டங்களை உருவாக்கி மகிழ்ந்தனர்.. நானோ அந்த சட்டங்களை நீக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்தியர்களிடையே உரையாற்றும் போது பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திரமோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க பயணம் மேற்கொண்டபோது, நியூயார்க் நகரில் மேடிசன் சதுக்கத்தில் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்து அசத்தினர்.
அதைப் போன்றதொரு வரவேற்பை இப்போது ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் சிட்னி நகரில் இன்று வழங்கினர். சிட்னியின் ஒலிம்பிக் பார்க்கில் ஆல்போன்ஸ் அரங்கில் இன்று மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி மேடை ஏறும் போது இந்திய வழக்கப்படியான பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உற்சாகமாக பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தோர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இங்கே எனக்கு அளித்த வரவேற்பை 125 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பிறந்தவர்களில் நான்தான் முதல் பிரதமராகி இருக்கிறேன். அதனால் எனக்கு பொறுப்பு அதிகமாக இருக்கிறது.
நாட்டுக்காக உயிரிழக்கவும் சிறையில் இருக்கவும் நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால் நாம் அனைவரும் இந்திய தாய் நாட்டுக்காக வாழ்வோம் என்று அழைப்பு விடுக்கிறேன்.
இந்தியாவில் இருந்து இரவில் புறப்பட்டால் மறுநாள் காலையில் ஆஸ்திரேலியாவை வந்தடைந்துவிடலாம். ஆனால் இந்தியாவின் பிரதமர் ஒருவர் ஆஸ்திரேலியா வந்து சேர 28 ஆண்டுகாலம் ஆகியுள்ளது. இனி ஒருபோதும் இப்படி நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என உறுதி அளிக்கிறேன்.
{ventuno}
சிட்னி ஒரு அழகான நகரம். ஆஸ்திரேலியா மிக அழகான நாடு. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட் இல்லாமல் வாழ முடியாது. இரண்டு நாடுகளையும் கிரிக்கெட் இணைத்துள்ளது.
இந்தியா இளைஞர்களின் தேசம்.. இளைஞர்களால் இந்தியா நிரம்பியுள்ளது. நமது இளைஞர்கள் பலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும். இளைஞர்களின் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.