பாகிஸ்தானில் மாநாடு நடத்தி நபிகள் நாயகத்திற்கு மரியாதை செலுத்தும் இந்துக்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் வசிக்கும் இந்துக்கள் மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்க வரும் 24ம் தேதி மாநாடு நடத்தி அதில் நபிகள் நாயகத்திற்கு மரியாதை செலுத்தி, இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம் என்ற செய்தியை பரப்ப உள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் வசிக்கும் இந்துக்கள் மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்க வரும் 24ம் தேதி மாநாடு ஒன்றை நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் அவர்கள் நபிகள் நாயகத்திற்கு மரியாதை செலுத்த உள்ளனர்.
இது குறித்து அனைத்து பாகிஸ்தான் இந்து உரிமைகள் இயக்க தலைவர் ஹாரூன் சர்ப்தியால் கூறுகையில்,
இந்துக்கள் நடத்தும் இந்த மாநாடு மூலம் இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம் என்ற தகவல் உலகம் முழுவதும் பரப்பப்படும். மத தீவிரவாதம் என்பது பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல மாறாக இது உலக அளவில் பிரச்சனையாக உள்ளது என்றார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மத, அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஹபிபுர் ரஹ்மான் ஆதரவு தெரிவித்துள்ளார்.