நாசா நிதியில் கையை வைத்த டிரம்ப்.. இந்தியாவுக்கும் சிக்கல்! சாதனை படைக்கும் நேரத்தில்..சோதனையா?
வாஷிங்டன்: ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பிறகு, விண்வெளிக்கு வீரரை அனுப்புகிறது இந்தியா. அமெரிக்காவிலிருந்து இந்தியரான சுபான் சுக்லா விண்வெளிக்கு நாளை மறுநாள் விண்வெளி மையத்திற்கு புறப்படுகிறார். இது இந்தியாவுக்கு பெருமையான தருணமாகும். ஆனால், இதன் பின்னர் இந்தியர்கள் மட்டுமல்ல அமெரிக்கர்கள் கூட விண்வெளிக்கு போக முடியாதபடி டிரம்ப் ஒரு வேலையை பார்த்திருக்கிறார். இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அதாவது இந்த ஆண்டு நாசாவுக்கான நிதியை டிரம்ப் குறைக்க யோசித்து வருகிறார். அப்படி நடந்தால், விண்வெளிக்கான பல திட்டங்கள் பழைய குடோனில் வீசப்பட்ட இரும்பு பொருளை போல, காலாவதியாகிவிடும்.

எலான் மஸ்க் பஞ்சாயத்தும் நிதி வெட்டும்
ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு எவ்வளவு நிதி தேவை என்பதை நாசா, பட்ஜெட்போட்டு அரசுக்கு கொடுக்கும். அரசு, அதற்கான நிதியை ஒதுக்கும். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்குடன் ஏற்பட்டிருக்கும் பஞ்சாயத்து காரணமாக, இந்த ஆண்டு நாசா எதிர்பார்க்கும் பட்ஜெட்டில், பாதியை மட்டுமே ஒதுக்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இது மட்டும் நடந்தால், 40 திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போகும். இதனால் 'சுபன் சுக்லாவின்' பயணத்திற்கு பாதிப்பு ஏற்படுமா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.
சுபன் சுக்லா பயணத்திற்கு பாதிப்பா?
மேலோட்டமாக பார்த்தால் இப்போதைக்கு பாதிப்பு இல்லை என்றுதான் தோன்றும். ஏனெனில், சுபன் சுக்லாவை விண்வெளிக்கு அனுப்புவது நாசா கிடையாது. 'Axiom Space' எனும் தனியார் நிறுவனம்தான் இவரை விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த மிஷனில் நாசாவின் ஒத்துழைப்பு இல்லாமல் இல்லை. சர்வதேச விண்வெளி மையத்தில் சுபன் சுக்லா தங்குவதற்கும், ஆய்வு செய்வதற்கும் அனுமதியை வழங்குவதோடு நாசா நின்றுவிடுகிறது. எனவே, நாசாவுக்கான நிதியை குறைப்பதால் சுக்லாவின் பயணம் தடைப்படாது.
ஆனால், இப்படியே நிதியை குறைத்துக்கொண்டே வந்தால்.. எதிர்காலத்தில் இந்தியர்கள் மட்டுமல்ல சொந்த நாட்டு விண்வெளி வீரருக்கு கூட உதவ முடியாத சூழலுக்கு நாசா தள்ளப்படும்.
நிதி வெட்டும் பிரச்சனைகளும்
சரி இந்த நிதி வெட்டால் வேறு எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் பார்ப்போம். நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை தவிர, மற்ற எல்லா திட்டங்களும் அடிவாங்கும் என்று ஓபன் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் டாக்டர் சிமியன் பார்பர் கூறியுள்ளார். இந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கினாலும், அமெரிக்காவால் செவ்வாய் கிரகத்தில் முதலில் கால் எடுத்து வைக்க முடியாது. ஏனெனில் சீனா இதை விட பலமடங்கு அதிகமாக விண்வெளித்துறைக்கு நிதியை ஒதுக்கி வருகிறது. எனவே சீனர்கள்தான் செவ்வாய் கிரகத்தை முதலில் தொடுவார்கள்.
தாமதாகும் நிலவுக்கான பயணம்
அதேபோல இன்னொரு சிக்கல் என்னவெனில், நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக 'ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம்' (எஸ்எல்எஸ்) எனும் நவீன ராக்கெட்டை நாசா வடிவமைத்து வருகிறது. இதற்கான செலவுகள் அதிகமாக ஆகிறது. இப்போது நிதியில் டிரம்ப் கைவைத்துள்ளதால் இந்த ராக்கெட் தயாரிப்பு தள்ளி போகலாம். இது மொத்த பயண திட்டத்தையும் பாதிக்கும்.
போராட்டங்களுக்கு மத்தியில் நாசா
மறுபுறம் எலான் மஸ்க் 'ஸ்டார்ஷிப்' எனும் ராக்கெட்டை உருவாக்கி வருகிறார். இதற்கு ஆகும் செலவு கம்மிதான். அப்புறம் என்ன? இதை வைத்து நிலவுக்கு போகலாமே? என்று உங்களுக்கு கேட்க தோன்றும். ஆனால், இந்த ராக்கெட்டை பரிசோதித்ததில் ஒரு முறை கூட அது வெற்றிப்பெறவில்லை. ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனமும் போட்டியில் இருக்கிறது. இந்நிறுவனம் இன்னும் ஒருமுறைக்கூட ராக்கெட்டை வெளியில் கொண்டு வந்து சோதித்து பார்க்கவில்லை. இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில்தான் நாசா இருக்கிறது.
காலநிலை மாற்றமும் அமெரிக்காவும்
இதைவிட கொடூரமான விஷயம் என்னவெனில், நிதி பற்றாக்குறையால் கைவிட முடிவெடுக்கப்பட்டிருக்கும் 40 திட்டங்களில், பூமியின் 'காலநிலையை' கண்காணிக்கும் திட்டமும் ஒன்றாகும். அதாவது இந்த திட்டத்தை இனி நாசா தொடர்ந்து மேற்கொள்ளாது. எனவே, பூமி எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications