ஈராக்கில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திடீர் முடிவு ஏன்?
வாஷிங்டன்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது திடீரென அமெரிக்கா விமான தாக்குதல் நடத்த முடிவெடுக்கப்பட்டதும், அதன் பின்னணி தகவல்களும் வெளியாகியுள்ளன.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபோது அமைதி காத்த நாடு அமெரிக்கா. ஆனால் இன்றோ நிலைமை மாறியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை இலக்கு கொண்டு அமெரிக்க போர் விமானங்கள் அதிரடி தாக்குதலை தொடுத்துள்ளன.
படையை திரும்ப பெற்ற அமெரிக்கா
ஈராக் அரசு கேட்டுக்கொண்டபோதுகூட அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று கைவிரித்துவிட்டது. தனது நாட்டு படைகளையும் திரும்ப பெற்றுக்கொண்டது.
இனப்படுகொலை
அரசியல் ரீதியாகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று ஈராக் அரசு தரப்பு மற்றும் தீவிரவாதிகள் தரப்புக்கும் செய்தியை தெரிவித்தது அமெரிக்கா. ஆனால் இப்போது அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில், தீவிரவாதிகளால், கிறிஸ்தவர்கள் குறிவைத்து கொல்லப்படுவது ஒபாமாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. முதன்முறையாக 'இனப்படுகொலை' என்ற வார்த்தை ஒபாமாவின் வாயில் இருந்து வந்துள்ளது.
கலவரமான ஈராக் நிலவரம்
கடந்த வியாழக்கிழமை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் எர்பில் நகரம் வீழ்ந்ததை கேள்விப்பட்டதும், நிலைமை மோசமடைவதை ஒபாமா உணர்ந்துள்ளார். ஏற்கனவே முக்கியமான அணைக்கட்டை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியதும், ஈராக் படைகள் பின்வாங்கி வரும் தகவல்களும் அவர் காதுக்கு எட்டியிருந்தது.
அவசர ஆலோசனை
இதையடுத்து அவசர ஆலோசனை கூட்டத்துக்கு ஒபாமா ஏற்பாடு செய்தார். இதில் ராணுவம், வெளியுறவு என முக்கியமான துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதே நேரம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் சக் ஹேகல் ஆகியோரை உடனடியாக வீடியோகான்பரன்சில் வருமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
மனிதாபிமான உதவி
அனைவருடனும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார் ஒபாமா. அப்போதுதான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கொடுமைக்கு உள்ளாகி மலைப்பகுதிகளில் மறைந்து வாழும் யாசிதிஸ் இன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான வான்வெளி தாக்குதலை நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில்தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இனப்படுகொலை செய்கிறார்கள் என்ற வார்த்தையை ஒபாமா பயன்படுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தரைப்படை போகாது
அதே நேரம் அமெரிக்க தரைப்படையை ஈராக்கிற்கு மீண்டும் அனுப்புவதில்லை என்பதில் ஒபாமா உறுதியாக இருந்தார். ஒருவேளை அமெரிக்கர்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் மட்டுமே அவர்களை மீட்க அமெரிக்க தரைப்படை அனுப்பப்படும் என்று ஒபாமா கூறியுள்ளார். உடனடியாக பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு தனது செய்தியை தெரிவித்தார் ஒபாமா.
அமெரிக்கர்களுக்கும் விருப்பம்
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மத தீவிரவாதிகளிடம் சிக்கி இன்னல்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காமல், அவர்களுக்கு உதவி செய்வதையே அமெரிக்கர்களும் விரும்புவார்கள் என்று நினைக்கிறேன் என்று நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். இப்போது தாக்குதலும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.