துபாயில் ஈமான் அமைப்பு வழங்கும் தமிழகத்து நோன்புக் கஞ்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் தமிழகத்து நோன்புக் கஞ்சியினை துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள குவைத் பள்ளியில் (லூத்தா ஜாமிஆ பள்ளி) வழங்கி வருகிறது.
துபாயில் சனிக்கிழமை மாலை ரமலான் நோன்பு துவங்கியதையடுத்து ஞாயிறு மாலை முதல் 38 ஆண்டுகள் அமீரகத்தில் சமுதாயப் பணியாற்றி வரும் ஈமான் அமைப்பு தமிழகத்து நோன்புக் கஞ்சியுடன், பேரீத்தம் பழம், தண்ணீர், ஆரஞ்சு, சமோசா உள்ளிட்டவற்றவற்றை நோன்பாளிகளுக்கு வழங்கி வருகிறது.
மேலும் ஃபிர்ஜ் முரார் பள்ளி மற்றும் ஈடிஏ அஸ்கான் அருகிலுள்ள பள்ளி ஆகியவற்றிலும் நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுத்தீன், துணைத் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், தகவல் தொடர்பு சாதிக் மற்றும் இக்பால், முஹம்மது முஸ்லிம், முஹம்மது இல்யாஸ் உள்ளிட்ட குழுவினர் நோன்பு திறப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தினமும் 4000க்கும் மேற்பட்டோருக்கு நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாட்டவர் அனைவரும் நோன்புக் கஞ்சியை பருகி இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
உக்ரைன் நாட்டில் இருந்து வருகை புரிந்த ஜேம்ஸ் எனும் சுற்றுலாப் பயணி ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் இஃப்தார் பணிகளை வியந்து பாராட்டினார்.