ஆப்கன் குருத்வாரா மீது கொடூர தாக்குதல்.. சீக்கியர் உள்பட இருவர் பலி.. கோழைத்தனம் என இந்தியா சாடல்
காபூல்: ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் புகழ்பெற்ற கார்டே பர்வான் குருத்வாராவில் அருகே இன்று காலை குண்டுகள் வெடித்த நிலையில் துப்பாக்கியால் பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் சீக்கியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். இது கோழைத்தனமான தாக்குதல் என இந்தியா விமர்சனம் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் புகழ்பெற்ற கார்டே பர்வான் குருத்வாரா உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை குருத்வாராவில் 20 முதல் 25 பேர் இருந்தனர்.
அப்போது குருத்வாரா அருகே குண்டுகள் வெடித்த நிலையில் துப்பாக்கி ஏந்தி மர்மநபர்கள் குருத்வாராவுக்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் தாககுதல் நடத்தி துப்பாக்கியால் சுட்டனர்.
இதுபற்றி குருத்வாராவின் தலைவர் குர்னாம் சிங், பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான ஆர்பி சிங்கிடம் பேசியுள்ளார். இதுபற்றி ஆர்பி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,‛‛காபூலில் உள்ள கார்டே பர்வான் குருத்வாராவில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக குருத்வாராவின் தலைவர் குர்னாம் சிங் கூறியுள்ளார்.. பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக தலையிட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே மற்றொரு பாஜக தலைவர் மஜிந்தர் சிங் சிர்சா ஒரேயொரு சீக்கியர் கொல்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‛‛கார்டே பர்வான் குருத்வாரா தாக்குதலில் ஒரு சீக்கியர் பலியாகியுள்ளார். என்னுடன் தொடர்பில் இருக்கும் காபூலின் சீக்கிய சங்கம் மூலம் கிடைத்த அப்டேட் தான் இது. ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் உதவியற்றவர்களாக உள்ளனர்'' என வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் குருத்வாரா மீதான தாக்குதலில் ஒரு சீக்கியரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முஸ்லிம் ஒருவரும் இறந்திருப்பது இன்று மாலை உறுதி செய்யப்பட்டது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. இதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛குருத்வாரா கார்டே பர்வான் மீது கோழைத்தனமாக நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்க வேண்டும். தாக்குதல் செய்தி கிடைத்தது முதல் அங்குள்ள நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்'' என கூறியுள்ளார்.
இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என கூறும் நிலையில் தற்போது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக காபூலில் 2020ல் ஸ்ரீகுருஹர் ராய் சாகிப் குருத்வாராவில் பயங்கரவாதி கையெறி குண்டு வீசி, துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான். இதில் 27 சீக்கியர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.