இந்தியா நட்பு நாடு இல்லை.. சிறுபான்மையினர் விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதாக குமுறும் வங்கதேசம்
டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்து மத துறவியான சின்மோய் கிருஷ்ணதாஸ் தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருப்பது தான் வன்முறைக்கு காரணம். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் வங்கதேசம் நம் நாட்டை குற்றம்சுமத்தி உள்ளது. சிறுபான்மை விஷயத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுவதாகவும், இந்தியா நட்பு நாடு இல்லை எனவும் கூறியுள்ளனர்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

வங்கதேச இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறார். தற்போது மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவரான சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி எனப்படும் சந்தன் குமார் தர் கைது செய்யப்பட்டது தான்.
இவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி டாக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடந்த பேரணியில் அந்த நாட்டின் தேசியக்கொடி மீது காவி கொடி ஏற்றிய புகாரில் தேசத்துரோக வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தான் அவரை தற்போது கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து தலைநகர் டாக்கா மற்றும் துறைமுக நகரமான சட்டோகிராம் உள்பட பல நகரங்களில் போராட்டங்கள் நடந்தது. வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதோடு இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே தான் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் உள்பட பல கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனால் கோபமடைந்தவர்கள் வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்புக்கு தடைக்கோரி அந்த நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தான் சிறுபான்மை சமூகத்தினர் மீதான அக்கறையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. வங்கதேசம் மீது தேவையின்றி இந்தியா அக்கறை செலுத்தி வருகிறது என்று அந்த நாட்டு அரசு விமர்சனம் செய்து வருகிறது. இதுதொடர்பாக இடைக்கால் அரசின் சட்ட விவகாரத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ரூல் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம் மக்கள் மீது பல கொடுமையான அடக்குமுறை சம்பவங்கள் நடக்கிறது.ஆனால் அவர்கள் எதையும் கண்டு கொள்வது இல்லை. அதுபற்றி கவலையும் கொள்வது இல்லை. ஆனால் வங்கதேசம் மீது தேவையின்றி இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இதன்மூலம் சிறுபான்மை சமூகத்தினர் மீதான அக்கறையில் இந்தியா இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. இத்தகைய இரட்டை நிலைப்பாடு என்பது கண்டிக்கத்தக்கது என்பதோடு எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று.
வங்கதேசத்தில் வசிக்கும் மக்களில் 64.1 சதவீதம் பேர் முந்தைய அவாமி லீக் கட்சியின் அரசை காட்டிலும் தற்போதைய இடைக்கால அரசு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக நம்புகின்றனர். இதனை வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா பங்களா சர்வே உறுதி செய்துள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகமது யூனுஷ், ‛‛இந்திய ஊடகங்கள் பரப்பும் தவறான தகவல்களை வெளிக்கொண்டு வரும்படி நாட்டின் பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். அதேபோல் முகமது யூனுஷின் ஊடக செயலாளர் ஷபிபுல் ஆலம் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛தொழில்துறை ரீதியாகவும் தவறான தகவல்களை பரப்ப சில இந்திய ஊடகங்களும், அதன் சமூக வலைதள பக்கங்களும் உள்ளன. ஆனால் இந்தியாவின் கிழக்கு எல்லையில் (வங்கதேசம்) புத்திசாலியான மக்கள் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு இந்து மக்கள் மனித வரலாற்றில் சிறந்த புரட்சி செய்து மிருகத்தனமான சர்வாதிகாரத்தை அகற்றினர் என்பதை மறந்து விடக்கூடாது’’ என கூறியுள்ளார்.
அதேபோல் டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இந்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். அப்போது ‛‛சேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும். வங்கதேச விவகாரங்களில் இந்தியா தலையிடக்கூடாது. வங்கதேசத்தில் மத மோதல்கள் உருவாகும் வகையில் இந்தியா செயல்பட கூடாது’’ என்று கூறினர். அதோடு மாணவர்கள் உரிமை கவுன்சில் தலைவர் பின் யாமின் மொல்லா கூறுகையில், ‛‛எல்லையில் ஒவ்வொரு வாரமும் இந்தியா மக்களை கொன்று வருகிறது. அந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டுகின்றனர். சமீபத்தில் கூட மசூதி தொடர்பான விவகாரத்தில் சில இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவை இப்போது நட்பு நாடாக வங்கதேசம் கருதவில்லை’’ என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications