உலகில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியல் வெளியீடு.. டாப்பில் இந்தியா!
உலகில் பெண்களுக்கு சற்றும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
Recommended Video
லண்டன்: உலகில் பெண்களுக்கு சற்றும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் குறித்து ஆய்வு நடத்தியது. உலகில் உள்ள 193 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா கண்டங்களிலும் மற்றும் தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள 550 நிபுணர்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்தியா முதலிடம்
அதில் பாலியல் தொழிலில் அடிமை மற்றும் பணிப்பெண் சேவை உள்ளிட்டவைக்காக பெண்களை கடத்துதல் மற்றும் கட்டாய திருமணம், கல் எறிந்து கொல்லுதல் மற்றும் பெண் சிசு கொலை உள்ளிட்ட நடைமுறைகளால் பெண்களுக்கு மிக அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
துன்புறுத்தல் குறையவில்லை
இந்தியாவில் பெண்களை புறக்கணிப்பது மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க மறுப்பது ஆகியவை அதிகம் உள்ளது. கற்பழிப்பு, திருமண கற்பழிப்புகள், பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல், பெண் சிசு கொலை ஆகியவை குறையாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா 3வது இடம்
இந்த வரிசையில் போரால் சீரழிந்த நாடுகளான ஆப்கானிஸ்தான் 2-வது இடமும், சிரியா 3-வது இடமும் பெறுகின்றன. தொடர்ந்து பஞ்சம் நிறைந்த நாடான சோமாலியா 4-வது இடத்திலும், சவூதி அரேபியா 5-வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் 83% அதிகரிப்பு
உலகளவில் பெண்களை கடத்துவோர் வருடம் ஒன்றிற்கு ரூ.10 லட்சத்து 23 ஆயிரத்து 225 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்கின்றனர் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் அரசு ஆவண தகவல்களின்படி, கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 83 சதவீதம் உயர்ந்துள்ளன. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பேர் கற்பழிக்கப்படுகின்றனர் என தகவல்கள் பதிவாகி உள்ளன.
கடுமையான பாதிப்பு
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த இதே ஆய்வில் ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் இருந்தன. ஆப்கானிஸ்தானில் 17 வருட தலீபான்களுக்கு எதிரான போரால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல், கல்வியறிவு இன்மை, வறுமை மற்றும் பிற மனித உரிமைகள் குற்றங்களால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாவதாக கூறப்பட்டுள்ளது
பாலியல் வன்முறை
7 வருட போர் சூழலில் சிக்கிய சிரியாவில் ஆரோக்கியம் மற்றும் பாலியல் மற்றும் பாலியல் அல்லாத வன்முறைக்கு அவர்கள் இலக்காகின்றனர். அரசு படைகளால் பெண்களுக்கு பாலியல் வன்முறை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் முன்னேற்றம்
4-வது இடம் வகிக்கும் சோமாலியாவில் 20 வருட போரால் வன்முறை கலாசாரம் பெருகி உள்ளது. இது மீண்டும் முதல் 5 இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. 5-வது இடம் வகிக்கும் சவூதி அரேபியாவில் சமீப வருடங்களில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
முன்னேற்றம் ஏற்பட வேண்டி
ஆனால் பெண்கள் வாகனங்கள் ஓட்ட விதித்திருந்த தடை ரத்து செய்யப்பட்ட நிலையிலும், பெண் சமூக ஆர்வலர்களின் சமீபத்திய கைது நடவடிக்கைகளால் அங்கு இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டிய தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் உள்ளது
இந்த டாப் 10 பட்டியலில் மேற்கத்திய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவும் இடம் பிடித்துள்ளது. இவற்றில் முதல் 10 நாடுகளில் பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, ஏமன் மற்றும் நைஜீரியா ஆகிய மற்ற நாடுகளும் இடம் பிடித்துள்ளன.