மெகுல் சோக்சிக்கு இறுகும் பிடி.. டொமினிக்காவில் இருந்து நாடுகடத்த முக்கிய ஆவணங்களை அனுப்பிய இந்தியா
ஆன்டிகுவா: டொமினிக்கா நாட்டில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி மெகுல் சோக்சியை நாடு கடத்த தேவையான ஆவணங்களை தற்போது இந்தியா டொமினிகாவுக்கு அனுப்பியுள்ளது.
இந்தியாவில் மிக முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்சி. இவர் கீதாஞ்சலி என்ற புகழ்பெற்ற நகைக்கடை நிறுவனத்தை நடத்தி வந்தவர்.
இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயை மோசடியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்தவர்.

டெமினிக்காவில் கைது
இவரது மோசடி வெளியே தெரிவதற்குள் இவர் கரிபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, அங்குத் தப்பியோடிவிட்டார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கைகள் மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மெகுல் சோக்சி ஆன்டிகாவில் இருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டொமினிகாவில் கைது செய்யப்பட்டார்.

ஆவணங்களை அனுப்பிய இந்தியா
இந்நிலையில், அவரை நாடு கடத்த தேவையான ஆவணங்களை டொமினிக்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இதற்குத் தேவையான சிபிஐ விசாரணை ஆவணங்கள் மட்டுமே டொமினிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை நாடு கடத்த டொமினிகா மற்றும் ஆன்டிகுவா அரசுகளுடன் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரிடம் இருந்து தேவையான தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

என்ன நடக்கும்
முன்னதாக, ஆன்டிகுவா நாட்டிலிருந்து வெளியேறியதன் மூலம் மெகுல் சோக்சி மிகப் பெரிய தவறை செய்துவிட்டதாகவும், அவரை மீண்டும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றும் அந்நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுன் தெரிவித்திருந்தார். மேலும், மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டிலிருந்து வெளியேறியது அவரை நாடு கடத்துவதை எளிமையாக்கிவிட்டதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால் மெகுல் சோக்சி தற்போது ஆன்டிகுவா குடிமகன் என்பதால் அவருக்கு சட்டப்படி அனைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆன்டிகுவா நாட்டின் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

நேரடியாக நாடு கடத்துங்கள்
இந்நிலையில், இது குறித்து பிரதமர் காஸ்டன் பிரவுன் கூறுகையில், "மெகுல் சோக்ஸி குற்றம் செய்தவர் என்பதை உறுதிப்படுத்த இந்திய அரசு டெமினிக்கா நாட்டிற்கு சில ஆவணங்களை அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இவை அடுத்தகட்ட விசாரணையில் ஆராயப்படும் என நினைக்கிறேன். மெகுல் சோக்ஸி மீண்டும் ஆன்டிகுவா நாட்டிற்கு அனுப்பப்பட்டால், இங்கு அவருக்கு சட்டப்படி அனைத்து பாதுகாப்பும் வழங்கப்படும். ஆனாலும், மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நேரடியாக நாடு கடத்துவது குறித்து டொமினிகா பரிசீலிக்க வேண்டும் என்பதே ஆன்டிகுவா நாட்டின் சார்பாக நான் வைக்கும் கோரிக்கையாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பின்னணியில் இந்தியா?
மேலும், மெகுல் சோக்சியை நாடு கடத்த இந்திய அதிகாரிகள் தான் அவரை ஆன்டிகுவா நாட்டிலிருந்து கடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் டெமினிக்கா சென்றதில் இந்தியாவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என சிபிஐ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications