இந்தியா சென்ற ஷெரீஃபை ஸ்கூல் சிறுவன் போன்று நடத்தியுள்ளனர்: இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஒரு பள்ளிக்கூட சிறுவன் போன்று நடத்தப்பட்டதாக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி கடந்த 26ம் தேதி பிரதமராக பதவியேற்ற விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது மனைவி மற்றும் மகனுடன் கலந்து கொண்டார். மேலும் கடந்த 27ம் தேதி அவர் பிரதமர் மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் கூறுகையில்,
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியா சென்ற ஷெரீஃபை ஒரு பள்ளி சிறுவனை போன்று நடத்தியுள்ளனர். டெல்லியில் இந்திய தலைவர்களை சந்தித்த ஷெரீஃபால் ஏன் ஹுரியத் மாநாட்டு தலைவர்களை சந்திக்க முடியவில்லை என்றார்.
பதவியேற்பு விழாவுக்காக இந்தியா சென்றதால் ஷெரீஃப் ஹுரியத் தலைவர்களை சந்திக்கவில்லை என்று அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், வெளியுறவுத் துறை ஆலோசகருமான சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்.