மலேசியாவில் இந்திய கைதியின் தூக்கு நிறைவேற்றம் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு
கோலாலம்பூர்: மலேசியாவில் இந்திய கைதியின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் 11 மணி நேரத்துக்கு முன்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்தவர் சந்திரன் பாஸ்கரன் என்பவர் மலேசியாவில் கடந்த 2003-ம் ஆண்டு முத்துராமன் என்பவரை கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சந்திரன் பாஸ்கரனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2008-ல் தமக்கான தூக்குத்தண்டனையை எதிர்த்து சந்திரன் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம் மனு 2012-ல் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை இன்று காலை தூக்கிலிட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே அவர் அனுப்பியிருந்த கருணை மனுவை பரிசீலனை செய்த ஜோகோர் மாநில சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில், சந்திரனின் தூக்குத் தண்டணையை ஒத்தி வைக்க உத்தரவிட்டார்.
சந்திரனின் தூக்கு நிறைவேற்றுவதற்கு 11 மணி நேரத்திற்கு முன்னதாக இந்த உத்தரவு கிடைத்ததால் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.