ஆஸி. பாலியல் பலாத்கார வழக்கில் இந்திய மருத்துவருக்கு சிறை- விசா ரத்து!!
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய மருத்துவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கான விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் 2010ஆம் ஆண்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண்ணை இந்திய மருத்துவர் பலாத்காரம் செய்தார் என்பது புகார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் சுஹைல் அகமது துரானிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 18 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அவரது ஆஸ்திரேலிய நாட்டுக்கான விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. துரானியின் மனைவியும், குழந்தையும், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள். அதனால் தமது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து துரானி வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இருப்பினும் மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக துரானியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் உடனே நாடு கடத்தப்படப்படமாட்டார் என்றும் கூறப்படுகிறது.