வங்காளதேசத்தில் இந்திய மருத்துவ மாணவர் குத்திக்கொலை: நண்பரே குத்திக் கொன்ற கொடூரம்
டாக்கா: வங்க தேசத்தில் இந்திய மருத்துவ மாணவர் ஒருவர் சக நண்பரை குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள சிட்டாங் பகுதியில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேர் அங்குள்ள சிட்டகாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் மருத்துவ படிப்பு பயின்று வந்துள்ளனர். இவர்கள் அதேபகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இதில் வின்சன் மைஸ்னம் சிங் என்ற மாணவர் நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த அதீப் ஷேக் என்ற மற்றொரு மாணவர், அவரை தடுக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வின்சம், கூர்மையான ஆயுதத்தை கொண்டு சேக்கை பயங்கரமாக தாக்கியுள்ளார். பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச்சம்பவம் பற்றி அறிந்த அருகில் வசித்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரையும் சோதித்த மருத்துவர்கள் ஷேக் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற வின்சன் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் ஒருவர் நண்பரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.