”மிஸ்டர் கே வோர்ல்ட்” போட்டி... மிரட்டல் வந்ததால் கேரள வாலிபர் போட்டியில் இருந்து விலகல்
ஜோகனஸ்பர்க்: உலக திருநங்கையர் அழகிப் போட்டியில் பங்கேற்க இருந்த கேரள வாலிபரின் குடும்பத்திற்கு மிரட்டல் வந்ததால் அவர் அப்போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஆணின் முக அமைப்பில் பெண்மைக்குரிய உடல்கூறுகளுடன் இருக்கும் திருநங்கையர்களை மேற்கத்திய நாடுகள் "கே" என்று குறிப்பிடுகின்றன.
இதைப்போல் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கான "மிஸ்டர் கே வோர்ல்ட்" போட்டிகள் கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்றது.
முதலில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர், இவர்கள் அனைவரும் ஒரு போட்டியில் பங்கேற்று தங்களின் உடலழகையையும், அறிவுக்கூர்மையையும் வெளிப்படுத்த வேண்டும். இதை பார்க்கும் நடுவர்கள் குழு, உரிய பரிசீலனைக்கு பின்னர் யாராவது ஒருவருக்கு "மிஸ்டர் கே வோர்ல்ட்'"பட்டத்தை அளிக்கும்.
அவ்வகையில், "மிஸ்டர் கே வோர்ல்ட-2015" போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள கிரிஸ்னா நகரில் வரும் 26 ஆம் தேதி தொடங்குகின்றது. ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த திருநங்கையர் பங்கேற்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவில் பகுதிநேர மாடலாக பணியாற்றிவரும் தாஹிர் முஹம்மது சையத் என்பவரது பெயரும் இடம்பெற்றிருந்தது.
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர் மட்டும்தான் ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒரே போட்டியாளர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போட்டியில் தாஹிர் முஹம்மது சையத் கலந்து கொள்வதை அறிந்ததும், கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் வசிக்கும் அவரது குடும்பத்தாருக்கு உள்ளூரில் இருந்து ஏராளமன மிரட்டல்கள் வரத்தொடங்கின.
அவர்கள் குடும்பத்தை ஊரைவிட்டும், மதத்தை விட்டும் ஒதுக்கி வைத்து விடுவோம் எனவும் சிலர் மிரட்டியதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து, உலக திருநங்கையர் போட்டியில் பங்கேற்பதாக இருந்த கேரள வாலிபர் தாஹிர் முஹம்மது சையத் இந்த போட்டியில் இருந்து வெளியேறியதாக இப்போட்டியை நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.