குண்டு மழைக்கு நடுவேயும் காசாவைவிட்டு தாயகம் திரும்ப மறுக்கும் இந்திய பெண்கள்
காசா: பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தீவிரமாகியுள்ள நிலையில், காசா பகுதியில் வேலை பார்த்து வந்த 4 இந்திய தையல்காரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அதே நேரம், பாலஸ்தீன ஆண்களை திருமணம் செய்துள்ள பெண்கள் சிலர் இந்தியா வர மறுத்துவிட்டனர்.
டெய்லர்கள்
லக்னோவை சேர்ந்த அப்துர் ரகுமான், மும்பையை சேர்ந்த அன்வர் ஹுசைன், பாதம் கஞ்ச் பகுதியை சேர்ந்த கமில், பரேய்லி பகுதியை சேர்ந்த ரஷித் அகமது ஆகியோர், காசா பகுதியில் டெய்லராக வேலை பார்த்து வந்தனர்.
இந்திய குழு விரைந்தது
காசா மீது இஸ்ரேல் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள நிலையில், நேற்று மட்டும் அங்கு, பாலஸ்தீனத்தை சேர்ந்த 97 ராணுவ வீரர்களும், இஸ்ரேலின் 13 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பகுதியில் சிக்கிக்கொண்ட இந்திய டெய்லர்களை மீட்க ரமல்லா பகுதியில் அமைந்துள்ள இந்திய பிரதிநிதித்துவ அலுவலர், குழு காசா சென்றது.
தாயகம் திரும்பினர்
அதிகாரிகள் சண்டை நடந்த பகுதியில் சிக்கியிருந்த நான்கு இந்தியர்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இரு வருடங்களுக்கு முன்புதான் கத்தாரில் இருந்து காசாவுக்கு வேலைக்காக இடம் பெயர்ந்த நான்கு டெய்லர்களும் பத்திரமாக இந்தியா திரும்பியுள்ளனர்.
அதிகாரிகள் ஆறுதல்
அதே நேரம் பாலஸ்தீன ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இந்திய பெண்கள் சிலர் தங்களது குடும்பத்தோடு இந்தியா வர விருப்பம் தெரிவிக்கவில்லை. இதற்கு கணவன்மார்களின், தாய்நாடு மீதான பற்றுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்திய அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துவருவதாக அந்த பெண்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் மறுப்பு
விசாகப்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண் காசாவின் கான்யூனிஸ் பகுதியில் வசித்து வருகிறார். 6 குழந்தைகள் அந்த பெண்ணுக்கு உள்ளனர். அப்படியிருந்தும், கணவனின் விருப்பத்துக்காக காசாவிலேயே வசிக்கப்போவதாக கூறிவிட்டதால் அவரை மீட்க சென்ற இந்திய அதிகாரிகள் திரும்பிவந்துள்ளனர். இதுபோல பல இந்திய பெண்களும் கூறிவிட்டு காசாவிலேயே வசிக்கிறார்கள்.