மூழ்கும் ஜகார்த்தா.. தலைநகரை நுசாந்தராவுக்கு மாற்றும் இந்தோனேசியா! இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலைநகராக இத்தனை ஆண்டுகள் ஜகார்த்தா நகரம் இருந்து வந்தது. இதனை கிழக்கு கலிமந்தன் மாகாணத்தில் அமைந்துள்ள நுசாந்தரா என்ற நகருக்கு மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான காரணங்கள் இந்தியாவுக்கும் எச்சரிக்கை மணி அடிப்பதாகவே உள்ளது.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள குட்டி நாடுதான் இந்தோனேசியா. விவசாயமும் சுற்றுலாத் துறையும் தான் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. கொரோனா காலத்தில் சுற்றுலாத் துறை ரொம்பவே பாதிக்கப்பட்டது.
இப்போது கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சுற்றுலாத் துறை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்தோனேசியாவுக்கு வருகிறார்கள்.
குலுங்கிய இந்தோனேசியா! 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேசியா
இந்தோனேசியாவின் தலைநகராக இத்தனை ஆண்டுகள் ஜகார்த்தா நகரம் இருந்து வந்தது. பல்வேறு காரணங்களால் ஜகார்த்தா நகரில் இருந்து கிழக்கு கலிமந்தன் மாகாணத்தில் அமைந்துள்ள நுசாந்தரா என்ற நகருக்கு வரும் 2024ஆம் ஆண்டுக்குள் தலைநகரை மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. நுசாந்தரா என்றால் உள்ளூர் மொழியில் 'தீவுக்கூட்டம்' என்று பொருளாகும். தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து மாற்றுவதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த நுசாந்தரா தீவு போர்னியோ தீவில் அமைந்துள்ளது.
தலைநகர் மாற்றம்
தற்போதைய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமார் 1,300 கிமீ தொலைவில் இந்த புதிய தலைநகர் அமைகிறது. இந்த திட்டத்தை முதலில் கடந்த 2019இல் அதிபர் ஜோகோ விடோடோ முன்மொழிந்தார். இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தத் திட்டம் தாமதமானது. ஜகார்த்தா நகரம் எதிர்கொண்டு வரும் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவே அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இருப்பினும், குழப்பமான இந்தத் திட்டம் சுற்றுச்சூழல் காரணங்களை முழுமையாக ஆய்வு செய்யத் தவறிவிட்டதாகவும் இதனால் திட்டமே தோல்வியடையலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு எச்சரிக்கை
அது சரி.. அதற்கு முன்பு இந்தோனேசியா ஏன் இந்த முடிவை எடுத்தது என்று பார்க்கலாம். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான ஜகார்த்தாவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு நிலத்தடி நீரைப் பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், ஆபத்தான விகிதத்தில் ஜகார்த்தா நகரம் மூழ்கி வருகிறது. ஜன நெருக்கடி மாசு உள்ளிட்டவையும் அங்கு முக்கிய பிரச்சினைகளாக மாறிவிட்டன. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் ஜகார்த்தா நகரம் பெரிய சதுப்புநிலத்தில் அமைந்துள்ளது.
முக்கிய பிரச்சினைகள்
அதேபோ ஜகார்த்தா நகரில் பொதுமக்களிடையே ஏற்றத்தாழ்வுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், அனைத்தையும் விட காற்று மாசு தான் அங்கு முக்கிய பிரச்சினை.. அங்குக் காற்றின் தரம் சுவாசிக்கவே முடியாத அளவுக்கு உள்ளது. போக்குவரத்து நெரிசலும் பெரிய தலைவலியாக மாறிவிட்டது. அமைச்சர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல எப்போதும் போலீஸ் கான்வாய்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்தளவுக்கு டிராபிக் பிரச்சினை தலைவலியாக மாறிவிட்டது.
நகரமே மூழ்கும் அபாயம்
புவி வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜகார்த்தா நகரம் மூழ்கி வருகிறது.. வரும் 2050க்குள் நகரத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். தலைநகரை புதிய இடத்திற்கு மாற்றுவதன் மூலம் ஜகார்த்தாவின் நெரிசல், காற்று மாசு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நகரை விடுவிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
நுசாந்தரா
புதிய தலைநகர் அமையவுள்ள நுசாந்தரா இடத்தில் 37 லட்சம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். தாதுக்கள் நிறைந்த கிழக்கு காளிமந்தன் காடுகளுக்கும் ஒராங்குட்டான் குரங்குகளுக்கும் இந்த பகுதி பெயர் பெற்றது. புதிய தலைநகரம் அந்நாட்டின் அடையாளத்தின் சின்னமாகவும், பொருளாதார மையமாகத் திகழும் என்று அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது. அதேநேரம் கிழக்கு கலிமந்தனில் புதிய தலைநகரை அமைப்பது பாமாயில் தோட்டங்களின் விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்று சாடுகின்றனர். ஏற்கனவே, அங்குக் காடுகளை அழித்து விவசாயம் செய்வது அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆபத்து
மேலும், புதிதாகத் தலைநகரை உருவாக்க பல்வேறு கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்.. அப்படி ஒரேநேரத்தில் பல்வேறு கட்டுமானங்களை மேற்கொள்ளும்போது, அவை வனவிலங்குகளுக்குப் பெரிய சிக்கலைத் தரும். மேலும், பசுமையான மழைக்காடுகள் நிறைந்த பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதும் அதிகரிக்கும். அந்நாட்டு அரசின் இந்த நடவடிக்கையால் தங்கள் சுற்றுச்சூழலுக்கும் கலாச்சாரத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்று போர்னியோவின் பழங்குடி மக்கள் அஞ்சுகின்றனர்.
விவாதம்
இந்த புதிய தலைநகர் நுசாந்தராவின் பெயரே கூட இணையத்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பியது. நுசாந்தரா என்ற வார்த்தை ஜாவானிய மொழியில் தீவு கூட்டங்களான தேசம் என்பதைக் குறிக்கும் என்பதால் இந்த பெயர் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இந்த எதிர்ப்புகள் பெரியளவில் இல்லை என்பதால் அந்நாட்டு அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை.. புதிய தலைநகரை உருவாக்க 32 பில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாக இது இருக்கும்.
தலைநகர் மாற்றம்
கடந்த காலங்களில் பல நாடுகள் தங்கள் தலைநகரை மாற்றியுள்ளன. பிரேசில் தனது தலைநகரை 1960இல் ரியோ டி ஜெனிரோவிலிருந்து பிரேசிலியாவுக்கு மாற்றியது. ஜீரியா 1991இல் லாகோஸுக்கு பதில் நாட்டின் தலைநகராக அபுஜாவை அறிவித்தது. கஜகஸ்தான் தனது தலைநகரை அல்மாட்டியிலிருந்து நூர் சுல்தானுக்கு 1997இல் மாற்றியது. மலேசியா தனது நிர்வாக தலைநகரைக் கோலாலம்பூரில் இருந்து புத்ராஜெயாவிற்கு 2003இல் மாற்றியது. 2006இல், மியான்மர் அதன் தலைநகரை யாங்கூனில் இருந்து நய்பிடாவுக்கு மாற்றியது. அதேபோல பாகிஸ்தான் 1967இல் கராச்சியில் இருந்து தனது தலைநகரை இஸ்லாமாபாத்திற்கு மாற்றியது. இதன் வரிசையில் இப்போது இந்தோனேசியாவும் இணைந்துள்ளது.