5000 அமெரிக்க டாலர் கட்டணப் பாக்கி... நவாஸ் ஷெரீப் விமானத்தை சிறை பிடித்த ஈரான்
டெஹ்ரான்: கட்டண பாக்கி செலுத்தப் படாததற்காக நவாஸ் ஷரீப்பின் விமானத்தை ஈரான் விடுவிக்க மறுத்த சம்பவம் ஊடகங்கள் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து அந்நாட்டு அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்த போது, அதில் பயணம் செய்த பெண் பயணியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.

இதனால், சிகிச்சைக்காக விமானம் அவசரமக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால், அப்போது விமான நிலைய பயன்பாட்டுக் கட்டண பாக்கி தொகையை கேட்டு பாகிஸ்தான் விமான அதிகாரிகள் செலுத்தவில்லை.
அதனைத் தொடர்ந்து டெஹ்ரான் விமான நிலைய அதிகாரிகள் இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான அந்த விமான நிறுவனத்துக்கு பல முறை நினைவூட்டியுள்ளனர். ஆனபோதும் கட்டணம் கட்டப்படவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷரீப், கடந்த மே மாதம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றார். வழியில் மே மாதம் 12-ம் தேதி பெட்ரோல் நிரப்புவதற்காக டெஹ்ரான் விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு ஜெட் விமானம் தரையிறங்கியது.
இதனை தங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக நினைத்துக் கொண்ட டெஹ்ரான் விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்துக்கு பெட்ரோல் போட மறுத்ததுடன், கட்டண பாக்கி தொகையான 5 ஆயிரம் டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 3 லட்சம் ரூபாய்) கட்டாவிட்டால், விமானத்தை இங்கிருந்து செல்ல விட மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக டெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த தொகையை ‘கிளியர்' செய்தனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். அதன் பின்னரே, ஈரான் அதிகாரிகள் அந்த விமானத்துக்கு பெட்ரோலை நிரப்பி, வழியனுப்பி வைத்துள்ளனர்.
இவ்வளவு நாட்களாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு துறையின் கவனத்துக்கு செல்லாமல் இருந்த இந்தப் பிரச்சினை தற்போது ஊடகங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications