யுஎஸ் பொருளாதார தடை.. ஈரானில் பண மதிப்பு சரிந்தது.. வர்த்தகர்கள் கொந்தளிப்பு.. அதிபர் உரை
தெஹ்ரான்: அமெரிக்காவின் பொருளாதார தடையை கையாண்டு மீண்டும் விடுவோம் என்று ஈரானிய அதிபர் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். ஈரானின் தேசிய பண மதிப்பு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததால், வர்த்தகர்கள் நாடாளுமன்றம் முன்பாக போராட்டங்களை நடத்திய நிலையில் ஹசன் ரௌஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடையை விதித்துள்ளது. ஈரானுக்கும், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளுக்கும் நடுவே போடப்பட்டிருந்த அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதோடு, ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், தனது நட்பு நாடுகளையும், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்குமாறு கோரியுள்ளது அமெரிக்கா.
வர்த்தகர்கள் கோபம்
இந்த நிலையில், ஈரானில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஈரானின் பண மதிப்பு மளமளவென சரிந்துள்ளது. இதனால் வணிகர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். ஈரானின் பணமான ரியால் மதிப்பு குறைந்ததால், இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. இதுதான் வர்த்தகர்கள் கோபத்திற்கு காரணம். இதையடுத்து பாதுகாப்பு படைகளை கொண்டு போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிபர் ஈடுபட்டுள்ளார்.
அதிபர் உரை
பதற்றத்தை தணிக்கும்விதமாக ஈரான் நாட்டு மக்களிடையே டிவியில் உரையாற்றிய அதிபர் ஹசன் ரௌஹானி, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் அமெரிக்கா மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளது. அமெரிக்காவின் நெருக்கடிக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம்.
ரியால் மதிப்பு
ரியாலின் மதிப்பு குறைவதற்கு காரணம் வெளிநாட்டு மீடியாக்களின் பரப்புரைகள்தான். ஈரானின் பொருளாதாரம் சமீபகாலமாகவே சீராக சென்று கொண்டுள்ளது. அதில் பிரச்சினைகள் இல்லை. மோசமான சூழலில் கூட ஈரானியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்பதை நான் உறுதி செய்கிறேன். நம்மிடம் போதிய அளவுக்கு சர்க்கரை, கோதுமை மற்றும் சமையல் எண்ணை உள்ளன. மார்க்கெட்டில் செலுத்த தேவைப்படும் அன்னிய செலவாணி இருப்பு உள்ளது.
உளவியல் தாக்குதல்
எதிரி நமது பொருளாதாரத்தை உளவியல் ரீதியாக குலைக்கப்பார்க்கிறார். சமீப காலமாக பஜார்களை மூட சிலர் முயல்கிறார்கள். நமது காவல்துறை அதை சமாளித்துவிட்டது. இவ்வாறு அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.