சதாம் ஆட்சிக் கால ரசாயன ஆயுத வளாகத்தை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்.!!
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் செயல்பட்ட ரசாயன ஆயுத தயாரிப்பு வளாகத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஈராக்கில் ஆளும் ஷியா அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்ந்துள்ள உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தலைநகர் பாக்தாத் அருகே முகாமிட்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மெதுவாக முன்னேறி வருகின்றனர்.
ஏற்கெனவே பல முக்கிய நகரங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் வீழ்ந்துவிட்டன. இந்த நிலையில் தலைநகர் பாக்தாத் அருகே 46 மைல் தொலைவில் உள்ள சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட வளாகம் இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமாகியுள்ளது.
இத்தகவலை உறுதிப்படுத்திய அமெரிக்கா, ஆயுத தயாரிப்பு வளாகத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினாலும் அவர்களால் மீண்டும் அங்கு உற்பத்தியை தொடங்க இயலாது என்று கூறியுள்ளது.