சிங்கப்பூரில் மருத்துவம் இலவசமா? - ஆதாரங்களுடன் ஒரு அலசல்
சமீபத்தில் வந்த மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய சில வசனங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் மீது சமூக வலைத்தளங்களின் பார்வை திரும்பியுள்ளது. '7% சரக்கு மற்றும் சேவை வரி வாங்கும் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம்' என்று விஜய் பேசிய வசனம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் கிடையாது.
சிங்கப்பூரில் வேலை செய்யும் அந்நாட்டு குடிமகன்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் வருமானத்திலிருந்து மாதம் 8% முதல் 10.5% வரை 'மெடிசேவ்' என்கிற கணக்கில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகைதான் அவசர காலங்களில் அல்லது மிகப்பெரிய சிகிச்சைக்கு கழித்துக் கொள்ளப்படுகிறது. அதுவும் நம் விருப்பத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு சிகிச்சைக்கும் எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்று விதிமுறைகள் உள்ளன. அதன்படிதான் எடுக்கமுடியும்.
உதாரணத்திற்கு சிங்கப்பூரில் பல் மருத்துவத்திற்குத்தான் கட்டணம் மிக அதிகம். ஒரே ஒரு பல்லில் பிரச்சினை என்று போனால் கூட ஆரம்பகட்ட பரிசோதனைக்கே குறைந்தது 150 வெள்ளி (சிங்கப்பூர் டாலர்) கட்டணம் ஆகிவிடும். நம்மூர் காசில் ஏழாயிரம் ரூபாய். ஆனால் பல் தொடர்பான ஏதாவது அறுவை சிகிச்சை என்றால் மட்டுமே மெடிசேவ் உதவும். இல்லையென்றால் சொந்தக்காசுதான்.
அதனால் அங்கு வேலை செய்யும் நம்மாட்கள் ஏதாவது பல் தொடர்பான நோயென்றால் கவலைப்படாமல் விமானம் பிடித்து ஊருக்கு வந்துவிடுவார்கள். மொத்த செலவும் அங்கு கொடுப்பதை விட குறைவாகத்தான் ஆகும்.
அறுவைச் சிகிச்சைகளும் இந்தியாவிலேயே கட்டணம் குறைவு.
அரசாங்க பாலி கிளினிக்குகள் ஆறு அங்கு உண்டு. படுக்கை வசதி இல்லாத, இரத்தம், எக்ஸ் ரே வரை இருக்கக்கூடிய கிளினிக்குகள். அங்கேயே மருத்துவரைப் பார்க்க மட்டும் கட்டணம் குடிமகனுக்கு 13 வெள்ளிகள் (ரூ 640), நிரந்தரவாசிக்கு 33 வெ (ரூ 1560), பிற வெளிநாட்டவர்க்கு 52 வெ (ரூ 2500). அதற்குப் பிறகு வரும் பரிசோதனைகள், சிகிச்சைகளுக்கு கூடுதலாகும். இதுதான் குறைந்தபட்சக் கட்டணம்.
கிளினிக்குகளே இப்படி என்றால் மருத்துவமனைகள்? கீழே இருக்கும் அட்டவணையே விவரம் சொல்லும். சிகிச்சைக் கட்டணம் இல்லாமல் வார்டுக் கட்டணமே எவ்வளவு என்று.. சிகிச்சை மற்றும் பிற செலவுகள் தனி.
சில சிகிச்சைக்காக தங்களின் மொத்த சேமிப்பையே இழந்தவர்கள் உண்டு. இதே சிகிச்சை இந்தியாவில் 35 % - 40% செலவு கூட ஆகாது.
அரசு மருத்துவமனையில் ஆத்திர அவசரத்துக்கெல்லாம் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அங்கே வரிசைப்படிதான் மருத்துவம் பார்க்க முடியும். உயிர் போகிற பிரச்சனை என்றாலும் தனியார் மருத்துவமனைதான் செல்ல வேண்டும்.
அதே போல அரசு மருத்துவமனையும் இலவசம் கிடையாது, தனியார் மருத்துவமனைகளை விட கட்டணம் குறைவு அவ்வளவே!
ரத்தப் போக்கு இருந்த போதே அனுமதிக்காமல் நோயாளியை காத்திருக்க வைத்த சம்பவங்கள் நிறைய உண்டு.
2 - 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.
சிங்கப்பூர் மிகச்சிறந்த நாடு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதே போல இந்தியாவைக் குறை கூற எவ்வளவோ விசயங்கள் இருக்கையில் பொய்யான தகவலை கூறி இந்தியாவை மட்டம் தட்டுவது நியாயமல்ல.
- சூர்யகுமார்
குறிப்பு: கட்டுரையாளர் சூர்யகுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வசிப்பவர்.